tamilnadu

புதுச்சேரியில் நாளை பட்ஜெட் தாக்கல்

புதுச்சேரி, ஜூலை 18- புதுச்சேரி அரசின் 2020 - 21ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை முதல்வர் நாராயணசாமி  சட்டப்பேரவையில் திங்கட்கிழமை (ஜூலை 20)  தாக்கல் செய்கிறார். இதுகுறித்து சட்டப்பேரவைச் செயலாளர் முனுசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி அரசின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் திங்களன்று  (ஜூலை 20) காலை 9.30 மணிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உரையுடன் துவங்குகிறது. அதனைத் தொடர்ந்து பிற்பகல் 12.05 மணிக்கு 2020 - 21 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சரவை கூட்டம்

புதுச்சேரி அரசின் 2020 - 21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அமைச்சரவை கூட்டம், முதல்வர் நாராயணசாமி தலைமையில் சனிக்கிழமை (ஜூலை 18) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்  அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணராவ், ஷாஜகான், கமலக்கண்ணன், அரசு துறை செயலர்கள், தலைமைச் செயலர் அசுவின் குமார், புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருன், டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்சவா ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத் தொடரின் துவக்க நாளன்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உரை குறித்தும், பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய  மக்கள் நல திட்டங்கள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் காங்கிரஸ் அரசு வெற்றிபெற்று முதல்வர் நாராயணசாமி தலைமையில்  பொறுப்பேற்று தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட்  என்பதால், இதில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.