tamilnadu

img

முஸ்லிம்களை பிரித்தாள நினைக்கும் பாஜகவின் எண்ணம் ஈடேறாது

வழக்கறிஞர் ஆர்.வைகை பேச்சு

மதுரை, மார்ச் 14- 2021-ஆம் ஆண்டுக்குள் இந்த நாட்டில் உள்ள சிறுபான்மையினர் அனைவரையும்  நாட்டிலிருந்து அகற்றிவிடுவோம் என பாஜக கூறுகிறது. அது நடக்காது. அவர்களின் நடவடிக்கைகளை எதிர்த்துத்தான் தொடர் போராட்டம் நடைபெறுகிறது என்று விடுதலைப்போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவருமான தோழர் பி.ராமமூர்த்தியின் மகளும் வழக்கறிஞருமான ஆர்.வைகை கூறினார். மதுரை மகபூப்பாளையம் ஜின்னா திடலில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக  நடைபெற்று வரும் 29-வது நாள் போராட்டத்தை வாழ்த்தி சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வைகை பேசியதாவது:-

குடியுரிமை சட்டத்தால் முஸ்லிம்களுக்கு ஒன்றும் பாதிப்பில்லை என்று உள்துறை அமைச்சர் தொடங்கி பாஜக தலைவர்கள் வரை கூறுகிறார்கள். பிற நாடுகளிலிருந்து வந்தவர்கள் இந்துவாக இருந்து அவர்கள் ஐந்தாண்டுகள் இந்தியாவில் இருந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். முஸ்லிம்களாக இருந்தால் 11 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்கிறது பாஜக. போராட்டம் நடத்தும் யாரும் பாகிஸ்தான்,  பங்களாதேஷ் நாடுகளிலிருந்து வந்தவர்கள் இல்லை. அனைவருமே ஆண்டாண்டு காலமாக தமிழ்நாட்டில்தான் வசித்துவருகிறார்கள். 

பாஜக நிர்வாகி ஒருவர் சொல்கிறார். 2021-ஆம் ஆண்டுக்குள் இந்த நாட்டில் உள்ள சிறுபான்மையினர் அனைவரையும்  நாட்டிலிருந்து அகற்றிவிடுவோம் என்கிறார். இதுதான் பாஜகவின் குறிக்கோள். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடுத்துள்ளோம். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தங்க மெடல் வாங்கிய ஒரு பெண்ணை நீ புர்கா போட்டு வந்திருக்கிறாய் எனவே இதில் கலந்துகொள்ளக்கூடாது என்கிறார்கள். இது எதைக் காட்டுகிறது. ஆர்எஸ்எஸ் கொள்கையின்படி அனைவரும் இந்துக்களாக மாற வேண்டும் என்பதைக் காட்டுகிறது. தேசியக்குடியுரிமைச் சட்டம் உள்ளிட்ட மக்கள் விரோதச் சட்டங்களுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டுமென்றார். முஸ்லிம்களின் 29-ஆம் நாள் போராட்டத்தில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் இரா. விஜயராஜன், புறநகர் மாவட்டச் செயலாளர் சி. ராமகிருஷ்ணன் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.ராதா, அ.ரமேஷ், வழக்கறிஞர் கீதா ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்திப்பேசினர்.