tamilnadu

காஞ்சி மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோய் எதிர்ப்பு மாத்திரைகள் தட்டுப்பாடு

காஞ்சிபுரம், ஜூலை 28 - காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோய் எதிர்ப்பாற்றல் மாத்திரைகள் தட்டுப்பாட்டு நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. 7 ஆயிரத்து 567 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 2 ஆயிரத்து 139 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பரவலை தடுக்கும் வகையில் பெருநகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள், நடமாடும் பரிசோதனை வாகனம் ஆகியவை மூலம் பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பரிசோதனைகள் நடைபெறுகின்றன. பரிசோதனைக்கு வருபவர்களுக்கு மட்டுமில்லாமல், காய்ச்சல் பரிசோதித்தும் நோய் எதிர்ப்பாற்றலை வழங்கக்கூடிய இரு வகையான மாத்திரைகளை அரசு இலவசமாக வழங்கி வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் பெரு நகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோய் எதிர்ப்பாற்றலை வழங்க கூடிய சத்து மாத்திரைகள் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் அனைத்து நபர்களும் சத்து மாத்திரை கோரினால், மருந்தாளுநர் தற்போது இருப்பு இல்லை, வந்தால் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கிறார். தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் கொரோனா பரிசோதனை முடிவு அறிக்கை அளித்த பின்னரே பணிபுரிய அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் ஏராளமானோர் பரிசோதனை மேற்கொள்ள வருகின்றனர். அவர்களுக்கு வழங்க தேவையான மாத்திரைகள் இல்லாதது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.