தருமபுரி, பிப்.28- தொழில்துறை முதன்மை செயலாளர் முருகானந்தம், முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் விஜியகுமார், தலைமை செயலாளரின் நேர்முக உதவியாளர் ஆகியோரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பி.டில்லிபாபு, மாவட்டத் தலைவர் கே.என்.மல்லையன் ,மாவட்டச் செயலாளர் சோ.அருச்சுணன் மற்றும் இளையராஜா, சிவகுரு,மாது,சிவக்குமார், பிரபு ஆகியோர் நேரில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்திற்குட்பட்ட சிவாடி கிராமத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் சில குடும்பங்கள் அரை ஏக்கர் முதல் ஒரு ஏக்கர் வரை நிலம் வைத்துள்ளனர். மீதமுள்ளவர்கள் நிலமற்ற ஏழை கூலி தொழிலாளர்கள். இந்நிலையில் மத்திய அரசு ஆந்திராவின் விஜயவாடாவிலிருந்து குழாய் மூலம் பெட்ரோலியம் கொண்டு செல்லும் வகையில் தருமபுரி சிவாடி கிராமத்தில் (எச்பிசிஎல்) பெட்ரோலிய எரிபொருள் சேமிப்பு கிடங்கு அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகம் தலித் மக்களின் நிலத்தை கையகப்படுத்த அம்மக்களின் அனுமதியின்றி முயற்சித்து வருகிறது. இந்நிலையில் ஏழை மக்களாகிய தலித் மக்களின் நிலத்தை கையகப்படுத்தக்கூடாது என ஆட்சேபணை தெரிவித்து கிராம பொதுமக்கள் மற்றும் நில உரிமையா ளர்கள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கடந்த 2018 மே 21 தேதியன்று தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம், சிவாடியில் அமைய உள்ள இத்திட்டத்தை கைவிடவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் தொடர் ஆட்சேபணைக்கு பின்னர் பாலக்கோடு அருகே உள்ள கும்மனூரில் இத்திட்டம் செயல்படுத்த நிலத்தை பார்வையிட்டதாக அறிகிறோம்.
எனவே சிவாடி தலித்மக்களின் நிலத்தில் இத்திட் டத்தை செயல்படுத்துவதை கைவிட்டு ரயில்வே இருப்பு பாதை செல்லும் வழியான பாலக்கோடு, காடுசெட்டிப்பட்டி, மாரண்ட அள்ளி பகுதிகளில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலங்களில் ஐடிபிஎல் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.