சென்னை, ஆக. 1- பால் கவர்களை திரும்ப ஒப்படைத்து ஒரு காலி கவருக்கு 10 பைசா வீதம் பெற்றுக்கொள்ளலாம் என்று ஆவின் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால், பால் உள்ளிட்ட குறிப்பிட்ட சில அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த அரசு விலக்கு அளித்தது. இந்தநிலையில், சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் விதமாக, வாடிக்கையாளர்கள் ஆவின் பால் காலி கவர்களை சில்லரை வணிகர்கள், சில்லரை விற்பனை நிலையங்கள், முகவர்கள், அதிநவீன பாலகங்கள், வட்டார அலுவல கங்கள் மற்றும் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்க அலுவலகங்களில் கொடுத்து, ஒரு காலி கவருக்கு 10 பைசா வீதம் பெற்றுக்கொள்ளலாம் என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான சந்தேகங்களுக்கு, கட்டணமில்லா தொலைபேசி எண்-18004253300; துணை பொது மேலாளர்- வடக்கு-94442 47327; துணை பொது மேலாளர் மையம்-73585 00929; உதவி பொது மேலாளர் (பொறுப்பு) தெற்கு-97907 73955 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம் என்று ஆவின் நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.