திருச்சூர், ஆக. 27- தமிழகம், கேரளம், புதுச்சேரியை உள்ளடக்கிய தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் 34 வது மாநாடு திருச்சூரில் ஆகஸ்ட் 24, 25, 26 தேதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. எல்.ஐ.சி பங்குகள் விற்கப்படுவதற்கான முடிவை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளதாக வணிக இதழ்கள் எழுதி வரும் நிலையில் எல்.ஐ.சி உள்ளிட்ட பொதுத் துறை பங்கு விற்பனை முயற்சிகளுக்கு எதிராக மக்கள் கருத்தை திரட்டுவோமென்று இம் மாநாடு அறிவித்துள்ளது.
கேரள கல்வி அமைச்சர் துவக்க உரை
மாநாட்டை துவக்கி வைத்து கேரள கல்வி அமைச்சர் இரவீந்திரநாத் உரையாற்றினார். அவர் “இன்று இன்சூரன்ஸ் துறை உள்ளிட்ட நிதித் துறை பொருளாதார நெருக்கடி என்கிற விஷச் சுழலில் சிக்கி இருக்கிறது. மக்களின் வாங்கும் சக்தியை அரிக்கிற, அழிக்கிற பொருளாதார பாதையை தொடருகிற வரையில் நெருக்கடியில் இருந்து மீள முடியாது. திரும்பத் திரும்ப குழியில் சறுக்குகிற நெருக்கடி ஏற்படுவதன் காரணம் அதுதான். இதற்கான மாற்றை நவீன தாராள மயத்தால் தர இயலாது. ஓர் இடதுசாரி மாற்றே அதற்கான பதிலாகும். மக்களிடம் இம் மாற்றை எடுத்துச் செல்ல வேண்டும். அதுவே எல்.ஐ.சியை பாதுகாக்கும்; அதுவே பொதுத் துறையை பாதுகாக்கும்” என்று வேண்டுகோள் விடுத்தார். மாநாட்டில் உரையாற்றிய அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தலைவர் அமானுல்லாகான், “ கால் நூற்றாண்டு காலமாய் இன்சூரன்ஸ் துறை சந்தித்து வரும் சவால்தான். நவீன தாராளமயத்தாக்குதலை எதிர்கொண்டு 25 ஆண்டு காலமாய் தாக்குப்பிடித்து நிற்கிற ஒரே துறை இன்சூரன்ஸ் துறைதான். ஒரே சங்கமும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்தான். இதற்கு காரணம் மக்கள் கருத்துதான். ஆனால் இன்று மக்கள் கவனம் திசைதிருப்பப்படுகிறது. கடுமையான பொருளாதார தாக்குதல்களை மூடி மறைக்கிற திரைகள் தொங்கவிடப்படுகின்றன. மக்களின் நிஜ அடையாளம் மறைக்கப்படுகிறது. இதற்கு எதிரான போராட்டத்தையும் தொழிற்சங்கங்கள் ஒரு சேர நடத்த வேண்டியுள்ளது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வி. ரமேஷ் பேசும் போது “ தொழிலாளர் ஊதியம், வேலை, எதிர்காலம் எல்லாம் தாக்கப்படுகிற சூழலில் தொழிலாளர் இயக்கத்தின் ஒற்றுமை, விரிந்த கைகோர்ப்பு தேவைப்படுகிறது என்றார்.
முன்னதாக வரவேற்புரை ஆற்றிய வரவேற்புக் குழு தலைவரும் தலித் சோஷன் முக்தி மன்ச் தலைவருமான கே.இராதாகிருஷ்ணன் “ சமூக தளத்தில் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தமிழக இன்சூரன்ஸ் ஊழியர் களத்தில் ஆற்றி வரும் பணியை பாராட்டி இது சிறந்த முன்னுதாரணம் என குறிப்பிட்டார். துவக்க விழாவில் மண்டலத் தலைவர் குன்னி கிருஷ்ணன், பொது செயலாளர் டி. செந்தில்குமார், அகில இந்திய இணைச் செயலாளர் எம். கிரிஜா ஆகியோரும், சகோதர தொழிற்சங்கத் தலைவர்களும் உரையாற்றினார்கள்.
பிரதிநிதிகள் மாநாடு
பிரதிநிதிகள் மாநாட்டில் 400 பிரதிநிதிகளும், பார்வையாளர் களும் கலந்து கொண்டனர். விரிவான விவாதங்கள் நடை பெற்றன. சங்கத்தின் தலைவர்கள் ஸ்ரீகாந்த் மிஸ்ரா, வேணு கோபால் ராவ், எஸ்.எஸ். போத்தி, கே.நடராசன், ஆர்.டி.தரணிபதி, சி.ரவீந்திரநாதன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினார்கள். பாலின நிகர் நிலை குறித்த சிறப்பு அமர்வில் டாக்டர் கிரண் மொகே, வகுப்புவாத வரலாறு குறித்த சிறப்பு அமர்வில் வரலாற்று ஆய்வாளர் டாக்டர் கே.என்.கணேஷ் ஆகியோர் உரையாற்றினர். திருச்சூர் இன்சூரன்ஸ் ஊழியர்களின் வயலட் கலைக்குழு வினரின் கலை மாலை நடைபெற்றது.
புதிய நிர்வாகிகள்
மாநாட்டில் புதிய தலைவராக பி.பி.கிருஷ்ணன், பொதுச் செயலாளராக டி. செந்தில்குமார், பொருளாளராக எஸ். சிவசுப்பிரமணியன், துணைத் தலைவர்களாக கே.சுவாமி நாதன், ஆர். தர்மலிங்கம், சர்வ மங்களா, பி.ராஜூ, இணைச் செயலாளர்களாக வி.சுரேஷ், ஆர்.கே.கோபிநாத், எஸ்.ரமேஷ்குமார், ஐ. கே.பிஜு, உதவி பொருளாளராக வி. ஜானகி ராமன் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
தீர்மானங்கள்
ஆயுள் இன்சூரன்ஸ் பிரிமியம் மீது ஜி.எஸ்.டி விதிக்கப்படு வதை கைவிடக் கோரி முக்கிய பிரமுகர்கள், அமைப்புகளை அணுகுவது என்றும், எல்.ஐ.சியை தனியார் மயமாக்குவதற்கான முயற்சிகளுக்கு எதிராக மக்கள் மத்தியில் பிரச்சாரங்கள் மேற்கொள்வதென்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் ஊழியர்களின் ஊதிய உயர்வு, புதிய பணி நியமனங்களுக்கான போராட்டங்களை முன்னெடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் மதவெறி, நவீன தாராள மயம், சமூக ஒடுக்குமுறை களுக்கு எதிராக களத்தில் உறுதியாக போராடுவதென்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ரூ. 12 லட்சம் வெள்ள நிவாரணம்
மாநாட்டில் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் அமைச்சரிடம் வழங்கப்பட்டது. நீலகிரி பகுதியில் நிவாரண உதவிகளை செய்ய ரூ. 2 லட்சம் கோவை சங்க நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது.