tamilnadu

வதந்திகளை நம்பாமல் பரிசோதனை செய்யுங்கள்

சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்

சென்னை, ஆக.28 - சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் போரூர் ராமசந்திரா மருத்துவமனைகளில் அடுத்த வாரம் முதல் கோவிட்-19 தடுப்பு மருந்து பரிசோதனை துவங்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷணன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரும்பாலானோர் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் பொது சுகாதார சட்டத்தை மதிக்காமல் நடக்கின்றனர். கொவிட்-19 தொற்று நோய் என்று தெரிந்த பிறகும் அதை பரப்பும் வகையில் நடப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொது சுகாதார சட்டத்தின்படி தொற்று நோய் பரவல் காலங்களில் அரசு வெளியிடும் வழிமுறைகள், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவற்றை பின்பற்றாவிடில் அதிகபடியான அபராதம் விதிப்பது, 3 மாத சிறை போன்ற கடும் நடவடிக்கைகள் அடங்கிய சட்டம் மிக விரைவில் அமலாகும் என்றார். தொற்றின் ஆபத்தை உணராமல் பெரும்பாலானோர் வதந்திகளை நம்பி பரிசோதனை செய்வதை தவிர்க்கின்றனர். நுரையீரல் பாதிப்பு ஏற்பட்ட பின் உயிரை காப்பாற்றுவது கடினம். எனவே, வதந்திகளை நம்பாமல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், இ-பாஸ் தளர்வுக்குப்பின் சென்னைக்குள் 3.25 லட்சம் பேர் வந்துள்ள அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். மேலும் 4 மாதங்களுக்கு கோவிட் பாதிப்பு தீவிரமாகவே இருக்கும் என்பதால் பொதுமக்கள் அரசின் அறிவுறுத்தல்களான முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை கடைபிடிப்பது மிக அவசியமாகும் என்றார்.