tamilnadu

img

மதவெறி சித்தாந்தத்தில் கருக்கொண்டிருக்கும் இந்துத்துவாவினரின் செயல்கள்

 திருப்பூர் கணக்கம்பாளையம் பகுதியில் இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் துணைத் தலைவர் பகவான் நந்து என்கிற நந்தகோபாலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தனது வாகன ஓட்டுநர் ள்ளிட்ட ஆறு பேரை கூலிப்படையாக ஏவிவிட்டு, தன்னையே கத்தியால் வெட்டிக் காயப்படுத்திக் கொண்டார். சராசரியான மனநிலை கொண்ட யாரும் இப்படிச் செய்யமாட்டார்கள். தன் கைகள், தோள்பட்
டையில் வெட்டிக் கொண்டு ரத்தம் சிந்தியது ஏதோ கடவுள் வழிபாடோ, வேண்டுதலோ அல்ல. தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள வேண்டும், அதன் மூலம் தான் இருக்கும் கட்சியில் தனக்கு உயர் பதவி கிடைக்க வேண்டும் என்பதே இவரது நோக்கம். இந்த  நோக்கத்திற்கு ஏன் இப்படி ஒரு சுய வதையைச் செய்ய வேண்டும்? இப்படிச் செய்தால் இந்துத்துவ அமைப்பின் நிர்வாகியை முஸ்லிம்கள் வெட்
டிக் கொல்ல முயன்றனர் என பரப்பிவிட்டு, இரு மதத்தினர் இடையேயான கலவரத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் அதற்குக்  காரணம். ஆக, சமூகத்தில் மதவெறிக் கலவரத்தை ஏற்படுத்தித் தான் ஆதாயம் அடைய வேண்டும் என்ற சிந்தனைதான் இதற்கு அடிப்படையாக உள்ளது. 
நல்ல வேளையாக உடனடியாக காவல் துறையினர் இந்த சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்து உண்மையைக் கண்டுபிடித்து விட்டனர். இப்போது பகவான் நந்து கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர் இத்தகைய குதர்க்கமான காரியத்தில் ஈடுபடுவது இது ஒன்றும் முதல்முறையல்ல! இதற்கு முன்பும் இதுபோன்ற குதர்க்கமான காரியங்களில் இந்துத்துவத்தின் பேரால் அமைப்பை நடத்தக் கூடியவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். இந்து மக்கள் அமைப்பு என்ற பெயரில் வழக்கறிஞர் கோபிநாத் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அவரது வாகனத்தின் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசிவிட்டார்கள் என்றும், அதைச் செய்தவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகள் என்பது போலவும் கோபிநாத் கூறியிருந்தார். காவல்துறையினர் புலன் விசாரணை செய்ததில் உண்மை அம்பலத்துக்கு வந்தது.
கோபிநாத்தே தனது வாகனத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிக் கொண்டு பொய்யாக புகார் கொடுத்தது தெரியவந்தது. இந்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்ட உடன் தலைமறைவான கோபிநாத், தனது வழக்கறிஞர் தொழிலைப் பயன்படுத்தி ஜாமீன் பெற்று எப்படியோ வெளியே தலை காட்டினார். அவர்தான் சமீபத்தில், திருப்பூரில் இஸ்லாமிய கூட்டமைப்பினர் நடத்தி வந்த தொடர் தர்ணா போராட்டத்துக்கு தடை விதிக்குமாறு உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தவிர பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டத் துணைத் தலைவராக இருந்த மாரிமுத்து கடந்த 2017ஆம் ஆண்டு தூக்கில் சடலமாகத் தொங்கினார். கைகள் கட்டப்பட்டு வாயில் துணி வைத்து அடைக்கப்பட்ட அவரது சடலத்துக்கு அருகிலேயே மோடி படத்துக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு பாஜக கொடியும் அவமரியாதை செய்யப்பட்ட நிலையில் இருந்தது. அத்துடன் 1, 2, 3, 4, 5 என எண்கள் குறிப்பிடப்பட்டு 3 என்ற எண் அடிக்கப்பட்டிருந்தது. இந்த காட்சியை வைத்து, பாஜக தலைவரை எதிரிகள் கொலை செய்து விட்டனர். மேலும் பல பாஜக தலைவர்களை கொலை செய்வதற்குத்
தான் எண்களைப் பட்டியலிட்டுள்ளனர் என்றும் அக்கட்சியினர் பிரச்சாரம் செய்தனர். அப்போதைய பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராசன் திருப்பூருக்கு வந்து பாஜக தலைவர்கள் கொல்லப்படுவது அதிகரித்து வருவதாகவும் பேட்டியளித்துச் சென்றார். ஆனால் காவலர்கள் புலன் விசாரணை செய்ததில், குடும்ப காரணத்திற்காக மாரிமுத்து தற்கொலை செய்து கொண்டதும், பாஜகவினர் அவரது சடலத்தை வைத்து அரசியல் நாடகம் ஆடியதும் அம்பலமானது. உண்மை அம்பலமானதால் மதரீதியாக இரு
தரப்பு மோதல் ஏற்படுத்தும் முயற்சி கலைந்துபோனது. இப்படியாக, அவ்வப்போது நடந்திருக்கும் சம்பவங்கள் தனித்தனியான தற்செயலான சம்பவங்கள் அல்ல. இந்துத்துவ சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டவர்களுக்கே இது போன்ற குதர்க்கமான சிந்தனைகள் உருவாகிறது. இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் சம்பவங்கள் தவிர மேலும் பல சம்பவங்களை குறிப்பிட்டால் பட்டியல் நீளும். 
ஒன்று பொய்யாக அவர்களே ஒரு சம்பவத்தை ஜோடித்து, அதை இஸ்லாமிய பயங்கரவாதிகள் செய்தனர் என சொல்லி கலவரம் ஏற்படுத்த முயல்வது, மற்றொன்று வேறு ஏதோ ஒரு காரணத்திற்காக நடந்த சம்பவங்களை அரசியல்ரீதியாக, மதரீதியாக முத்திரை குத்தி அதன் மூலம் ஆதாயம் அடையப் பார்ப்பது. இவை இரண்டும் இந்துத்துவ மதவெறிக் கூட்டத்துக்கு கைவந்த கலை.
அதுவும் வாட்ஸ் ஆப், பேஸ் புக், ட்விட்டர் என சமூக ஊடகங்களின் மூலம் தகவல் பரப்புவது விரைவாகவும், எளிதாகவும் இருக்கும் இன்றைய சூழலில் இதுபோன்ற உணர்ச்சித் தூண்டலான விசயங்களை தீயைப் போல் பரப்பி வருகின்றனர். ஏற்கனவே இஸ்லாமிய வெறுப்பு, மதச்சார்பற்ற அரசியல் இயக்கங்கள் மீதான வெறுப்பையும் தொடர்ந்து பரப்பி வருவதுடன், இதுபோல் உணர்ச்சிக் கொந்தளிப்பான சம்பவங்களை கச்சிதமாகப் பொருத்திவிட்டு அதை மதவெறி மோதலாக, மதவெறி அரசியலாக மாற்றி ஆதாயம் அடைய வெறித்தனமாக முயற்சிக்கின்றனர்.
இப்போது கூட, திருப்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது என்ற குறுந்தகவல் கடந்த ஓரிரு நாட்களில் சமூக ஊடகங்களில் வைரலாக பரப்பப்பட்டது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட ட்விட்
டர் பதிவில், இதுபோல் தடை உத்தரவு பிறப்பிக்கும் முடிவு எதுவும் இல்லை, வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார். சமூகத்தில் அவநம்பிக்கை, வெறுப்பு ஆகியவற்றை தொடர்ச்சியாகப் பரப்பிக் கொண்டு, மத அடிப்படையில் துவேஷமான சூழலை உருவாக்கி, அதில் ஆதாயம் அடைய வேண்டும் என்று மதவெறி நோக்கத்துடன் அமைப்பு ரீதியாக செயல்படுவதை ஏதோ தனித்த சம்பவங்கள் எனக்கடந்து போவது சரியல்ல. அவர்களது செயலுக்கான தூண்டுதல் மதவெறி சித்தாந்தத்தில் கருக் கொண்டிருக்கிறது. மத்தியில் பாஜக அதிகாரத்தில் இருக்கும் சூழலில் அரசு நிர்வாகத்தில் இருப்போர் இதுபோன்ற மதவெறி குற்றவாளிகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்காமல் வளைந்து கொடுக்கும் சம்பவங்களையும் பார்க்க முடிகிறது. எனவே திருப்பூர் நலனை விரும்பும் ஜனநாயக எண்ணம் கொண்ட அனைத்துத் தரப்பு மக்களும் மதவெறியர்கள் குறித்த புரிதலுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டியது அவசியம். ஆகையால்தான், கணக்கம்பாளையம் சம்ப
வம் முதல் சம்பவமும் அல்ல, மக்கள் விழிப்போடு இவர்களைப் புறக்கணிக்காவிட்டால், கடைசி சம்பவமாகவும் இருக்கப் போவதில்லை.
வே.தூயவன்

;