tamilnadu

img

புதுச்சேரி ஆளுநர் உடனே பதவி விலக வேண்டும் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

உதகமண்டலம், மே 2-நீலகிரி மாவட்டம் உதகையில் சிஐடியு மற்றும் ஏஐடியுசி அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற மேதின ஊர்வலம் மற்றும்பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை க்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று உரையாற்றினார். ஏஐடியுசி சார்பில் ஜி.ஆர்.ரவீந்திரநாத் பங்கேற்றார். பொதுக்கூட்ட நிகழ்ச்சியை தொடர்ந்து கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்ததாவது:ஈரானில் இருந்து எண்ணெய் இறக்கு மதியை இந்தியா உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்திருக்கிறது. நாட்டின் காவலன் நானே என சொல்லிக் கொள்ளும் மோடி அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மிரட்டலுக்கு என்ன செய்யப் போகிறார் என்பதிலிருந்தே அவர் யாருக்கான காவலன் என்று தெரிந்து விடும். மற்ற நாடுகளை ஒப்பிடும் போது மிகக் குறைவான செலவில் நாம் ஈரானிலிருந்து தான் எண்ணெய் பெற முடியும் என்பதால் அதை இந்தியா தொடர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மாநில அரசின் அதிகாரங்களில் தலையிடக் கூடாது என அழுத்தமாக தெரிவித்திருக்கிறது. அரசியல் சட்டத்தின் வழிகாட்டுதல்களை மீறி தேர்ந் தெடுக்கப்பட்ட ஒரு அரசின் முடிவுகளில் தலையிட்டு வந்ததால் சென்னை உயர்நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வழங்கி யிருக்கிறது. எனவே தார்மீகப் பொறுப்பை ஏற்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் உடனடியாக பதவி விலக வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்துகிறது.


குஜராத்தில் உருளைக்கிழங்கு பயிரிட்ட விவசாயிகள் தங்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்ட ஈடு தர வேண்டும் என பெப்சி – லேஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருக்கிறது. இது விவசாயிகளின் பயிரிடும் உரிமை பறிக்கும் செயலாகும். இத்தகைய செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிப்பதோடு, இதை அனுமதித்தால் நாடு முழுவதும் இத்தகைய அத்துமீறல் தொடர வாய்ப்பு உருவாகும் எனவும் மார்க்சிஸ்ட் கட்சி எச்சரிக்க விரும்புகிறது.கடந்த ஐந்து ஆண்டுகளில் தொழி லாளர்களின் அனைத்து உரிமைகளையும் பறித்த சாதனையைச் செய்தவர் தான் மோடி. 44 சட்டங்களை நான்கு தொகுப்புகளாக மாற்றி உழைப்பாளிகளின் எதிரியாக நிற்கும் மோடியை மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க வேண்டும் என்பதே மே தினத்தில் தொழிலாளர்களின் சபதமாக இருக்க வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் மே 23 ற்கு பிறகு ஆட்சி மாற்றம் நிச்சயம் ஏற்படும். நீலகிரி மாவட்டத்தின் மிக முக்கிய வாழ்வாதாரமான தேயிலைத் தொழிலை பாதுகாக்க மத்திய - மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அண்மையில் தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள ஜமீன் ஒழிப்பு சட்டத்தின் 16 ஏ என்ற சட்டத்திருத்தத்தை உடனடியாக கைவிட வேண்டும். மலைப் பகுதிகளில் பட்டா வழங்க தடையாக உள்ள 1168 அரசாணையை ரத்து செய்ய வேண்டும். குன்னூர் ரயில் நிலையத்தில் தற்போது இயங்கி வரும் முன்பதிவு மையத்தை மூடக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது மாநிலக்குழு உறுப்பி னர் ஆர்.பத்ரி, சிஐடியு மாவட்ட செயலாளர் ஜே.ஆல்தொரை ஆகியோர் உடனிருந்தனர்.

;