tamilnadu

img

இந்நாள் ஜுன் 04 இதற்கு முன்னால்

1940 - இரண்டாம் உலகப்போரில் ஆப்பரேஷன் டைனமோ என்று பெயரிடப்பட்ட, டன்க்கிர்க் வெளியேற்ற நடவடிக்கை நிறைவுற்றது. பிரான்சின் வடபகுதியில் பெல்ஜியத்திற்கு அருகிலுள்ள துறைமுக நகரமான டன்க்கிர்க்கில், ஜெர்மன் படைகளால் சுற்றிவளைக்கப்பட்ட நேசநாடுகளின் படைகளைக் கப்பல்கள்மூலம் காப்பாற்றியதே டைனமோ நடவடிக்கை. முதல் உலகப்போரின்போது, பிரான்ஸ் மண்ணில் நடைபெற்ற போர்களால் ஏற்பட்ட பாதிப்புகள் மீண்டும் ஏற்பட்டுவிடாமலிருக்க, ஜெர்மன்-பிரெஞ்ச் எல்லையில், மேஜிநாட் கோடு என்ற பெயரில் ஏராளமான சிறிய கோட்டைகள் கொண்ட அரண்களை பிரான்ஸ் 1930களில் அமைத்தது. மேஜினாட் கோட்டின் வடபுறம் ஆர்டென் என்னும் அடர்வனம் இருந்ததால், இவற்றைத்தாண்டி அப்பகுதியில் பெரிய தாக்குதல் எதையும் நடத்த முடியாது என்று பிரான்ஸ் கருதியது. ஆனால், மே 10இல் நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகியவற்றுக்குள் நுழைந்த ஜெர்மன் ராணுவம், ஆர்டென் வனத்திற்குள் புகுந்து, மியூஸ் ஆற்றில் தற்காலிகப் பாலங்களை அமைத்து முன்னேறியதைத் தடுக்க முடியவில்லை. அவசரத்திற்குப் படைகள் எதையும் வைத்துக்கொள்ளாமல், அனைத்துப் படைகளையும் பல்வேறு பகுதிகளுக்கு பிரான்ஸ் அனுப்பிவிட்டதால், இப்பகுதியில் மாட்டிக்கொண்ட படையினருக்கு உடனடியாக உதவுவதற்குப் படைகள் எதுவுமில்லை. இங்கிலாந்துப் படையின் மிகமுக்கியப் பகுதி ஜெர்மனியிடம் பிடிபட்டுவிடுமளவுக்கு நிலவிய இச்சூழ்நிலையை, மிகப்பெரிய ராணுவப் பேரழிவு என்று சர்ச்சில் குறிப்பிட்டார். டன்கிர்க்கின் நிலப்பரப்பு கவச வண்டிகளுக்கு ஏற்றதாக இல்லாமற்போனதாலும், வீரர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்டவை வரவேண்டியிருந்ததாலும், மே 23 அன்று ஜெர்மன் படைகள் முன்னேறுவதை நிறுத்த உத்தரவிடப்பட்டது. இதைப் பயன்படுத்திக்கொண்டு, 46 போர்க்கப்பல்கள், ஏராளமான வணிகக் கப்பல்கள் உட்பட 861 கப்பல்களில், மே 27இலிருந்து 9 நாட்களில் 3,38,226 வீரர்கள் காப்பாற்றப்பட்டனர். கவச வண்டிகள், வாகனங்கள், பிற கருவிகள் ஆகிய அனைத்தையும் நேசநாட்டுப் படைகள் டன்கிர்க்கிலேயே கைவிட்டுவிட நேர்ந்தது. ராணுவத்தை முன்னேறாமல் நிறுத்திய ஹிட்லரின் உத்தரவு, ஹிட்லர் செய்த மிகப்பெரிய தவறு என்றும், இந்நிகழ்வு இரண்டாம் உலகப்போரின் மிகமுக்கியத் திருப்புமுனைகளில் ஒன்று என்றும் குறிப்பிடப்படுகிறது.

-அறிவுக்கடல்