tamilnadu

img

இந்நாள் ஜுலை 31 இதற்கு முன்னால்

1868 - நவீன உலகின் முதல் போதைமருந்துத் தடுப்புச் சட்டமாகக் குறிப்பிடப்படும், இங்கிலாந்தின் ‘மருந்தகச் சட்டம் 1868’ இயற்றப்பட்டது. இச்சட்டம் நஞ்சுகளையும், போதை தரும் மருந்துகளையும் விற்பதற்குக் கட்டுப்பாடுகளை விதித்தது. அக்காலத்தில் மருந்தகங்களின் விற்பனையில் பெரும்பகுதி லாடனம் என்னும் அபினிக் கரைசல்தான் என்பதால், இச்சட்டம் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது. பல்வேறு நோய்களுக்கும் ஒரே மருந்தாக மருந்தகங்கள் அவரவர் தயாரித்து விற்கும் காப்புரிமை மருந்துகள் என்பவை அக்காலத்தில் பிரபலமாக இருந்தன. அவை பெரும்பாலும் இந்த அபினிக் கரைசலை அடிப்படையாகக்கொண்டே தயாரிக்கப்பட்டதால் இந்த எதிர்ப்பு எழுந்தது. உண்மையில் அபினி விற்பனையைத் தடையெல்லாம் செய்யாமல், கட்டுப்பாடுகளை மட்டுமே விதித்தாலும், இச்சட்டம் வந்தபின் அபினியால் ஏற்படும் மரணங்கள் மிகப்பெரிய அளவில் குறைந்தன.

உளவியலைப் பாதிக்கும் போதைப்பொருட்கள் ஆதிகாலத்திலிருந்தே பயிரிடப்பட்டு, விற்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வந்தன. மதுவுக்கெதிராக 7ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட இஸ்லாமியச் சட்டங்களே முதல் மதுவிலக்குச் சட்டங்களாகும். மது மட்டுமின்றி கஞ்சா புகைத்தல் உள்ளிட்ட அனைத்து போதைமருந்துகளையும் குரான் தடைசெய்தாலும், அதற்கு எதிர்ப்பும் இஸ்லாமின் வரலாறு முழுவதும் காணப்படுகிறது. 11-12ஆம் நூற்றாண்டுகளில் எகிப்தில் கஞ்சா வயல்கள் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன. ஒட்டோமான் சுல்தான் நான்காம் முராத் காலத்தில் காஃபி போதைமருந்தாகத் தடைசெய்யப்பட்டிருந்தது. அத்தடை பின்னர் நீக்கப்பட்டாலும், இஸ்லாமிய நாடுகளிலிருந்து வந்தது என்பதாலேயே ஐரோப்பிய நாடுகளிலும் தொடக்கத்தில் காஃபி தடைசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆசிய நாடுகள் பலவற்றிலும் போதைமருந்துகள்மீது இருந்த தடை, ஐரோப்பியர்கள் ஆக்கிரமித்தபோது வலுக்கட்டாயமாக நீக்கப்பட்டது. சீனப் பொருட்களுக்காக ஏராளமான வெள்ளியைத் தரவேண்டியிருந்ததால், அபினியைத் திணித்ததுடன், அதைச் சட்டப்பூர்மாக்க வலியுறுத்தி தொடுக்கப்பட்டதே அபினிப்போர்(இத்தொடரில் 2018 மே 27இல்!). பின்னாளில், நண்பர்கள் சமயச் சமூகம்(குவேக்கர்) அமைப்பு கடுமையாக எதிர்த்ததைத் தொடர்ந்து, அபினி தொடர்பான நிலையை இங்கிலாந்து மாற்றிக்கொள்ள வேண்டியதாயிற்று. 1909இல் பன்னாட்டு அபினி ஆணையம் அமைக்கப்பட்டு, 1912இல் நடைபெற்ற ஹேக் மாநாட்டில் அபினிக்கெதிரான முதல் பன்னாட்டு ஒப்பந்தம் உருவாயிற்று.