tamilnadu

img

ராசிபுரம்: ஓய்வு பெற்ற செவிலியர் குழந்தை விற்றுவருவதாக தகவல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் விருப்ப ஓய்வு பெற்ற செவிலியர் அமுத வள்ளி என்பவர் குழந்தைகளை வாங்கி விற்பனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஆண் குழந்தைகளை சுமார் 4 லட்ச ரூபாய்க்கும், பெண் குழந்தைகளை சுமார் 3 லட்ச ரூபாய்க்கும் விற்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குழந்தைகளின் அழகான தோற்றம், நிறம் ஆகியவற்றை வைத்து விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது. இதுகுறித்த ஆடியோ பதிவு தற்போது சமூக வலை தளங்களில் வெளியாகி உள்ளது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்கள் மூலம் குழந்தைகள் இருப்பதை அறிந்து, குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு விற்று வந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த குழந்தை இல்லாத ஒருவரிடம் ஓய்வு பெற்ற செவிலியர் பேசிய ஆடியோ வாட்ஸ்-அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் அந்தசெவிலியர், நான் கடந்த 30 ஆண்டுகளாக குழந்தைகளை வாங்கி கொடுத்து வருகிறேன். இதனால் தான் வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளேன். முன் பணமாக ரூ.30 ஆயிரம் கொடுத்தால் தான் குழந்தையை முன்பதிவு செய்துகொள்ள முடியும்.

குழந்தை வந்ததும் நேரில் வந்து பார்த்து எடுத்துச் செல்லலாம். குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வேண்டும் என்றாலும் ரூ.70 ஆயிரம் கொடுத்து வாங்கி கொடுக்கிறேன் என அவர் கூறுகிறார். இந்த ஆடியோ பேச்சு ராசிபுரம் பகுதியில் வைரலாக பரவி வருகிறது.

இதையடுத்து ராசிபுரம் மகளிர் காவல் துறையினர் ஓய்வு பெற்ற செவிலியரிடம் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.


;