நாமக்கல் அருகே பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் அருகே உள்ள தண்ணீர்பந்தல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. கட்டுமான தொழிலாளியான இவரது மகன் ரிதுன், அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், வியாழனன்று பள்ளி ஆசிரியை ஒருவர், மாணவன் ரிதுனை திட்டி பள்ளிக்கு வெளியே நிற்க வைத்துள்ளார். இதனால், மனமுடைந்த ரிதுன், ரயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ஈரோடு ரயில்வே காவல் துறையினர் ரிதுனின், உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே மாணவனின் பெற்றோர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் உள்ளிட்ட காவல் துறையினர், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். ஆனால், மாணவன் தற்கொலைக்கு காரணமான ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க போவதில்லை எனக்கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். இதன்பின், வழக்குப்பதிவு செய்கிறோம் எனக் கூறியதால், போராட்டத்தை கைவிட்டனர்.
மேலும், இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன் ஆகியோர் மாணவனின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, உரிய விசாரணை மேற்கொள்ளாவிடில், மாபெரும் போராட்டம் நடைபெறும், என்றனர்.