கே.ஆர்.கவுரி அவர்கள் கேரளாவில் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர் ஆகப் பொறுப்பேற்றபின் மதுரைக்கு வந்தார். மாபெரும் பொதுக் கூட்டம் திலகர் திடலில். எனது தந்தையார் அழைத்துச் சென்றார். திடலின் கொள்ளளவு பத்தாயிரம் என்பர். திடலுக்குள் பெண்களுக்கு மட்டுமே அனுமதி. எனக்கு வயது 9 அல்லது 10 தான் இருந்திருக்கும். சிறுவன் என்பதால் பெண்கள் பக்கம் செல்ல அனுமதி கிடைத்தது. செக்கச் செவேர் என்று கவுரி இருந்தார். கே.பி. ஜானகி அம்மாள் அவருக்கான மலர் மாலைகளை வாங்கி அணிவித்துக் கொண்டிருந்தார். தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் அதிகம் இருந்தனர். பெண்கள் கணிசமாக சிவப்பு சேலை அணிந்திருந்தனர். மதுரையில் பெண் குழந்தைகள் பிறந்தால் தோழர்கள் கவுரி என்ற பெயரைச் சூட்டி மகிழ்வர். ஆலப்புழையில் கேரள சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியின் மாநில மாநாடு நடைபெற்றது. அன்றைய மாநிலச் செயலாளர் என்ற முறையில் நானும் கோவை ஆர்.பாலகிருஷ்ணனும் கலந்து கொண்டோம். மாநாட்டில் கவுரி அம்மாள் உரை நிகழ்த்தினார். அது அவசர நிலை கருமேகம் சூழ்ந்திருந்த காலம். கவுரி அம்மாள் கம்பீரமாக உரை நிகழ்த்தினார். சென்னையில் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெற்ற போது கேரளாவில் இருந்து கொடிப்பயணம் தொடங்கியது. அதில் தோழர் என்.வரதராஜன் அவர்களுடன் நானும் பங்கேற்றேன். இ.எம்.எஸ், என்.வி, அவர்களிடம் கொடியை வழங்கினார். அதன்பின் என்.வி. சென்னை திரும்பினார். அங்கிருந்து தொடர்ந்து நான் பயணித்தேன். தோழர் கவுரி அவர்கள் கேரள மாநில எல்லையில் கலந்து கொண்டார். அவரை நான் செங்கொடித் தாய் என்று அழைத்தேன். அவரது சிறிய வயதில் அன்றிருந்த பெருந்தலைவர், அவ்வாறு அழைத்தார் என்றும் தற்போது எனது மூத்தவயதில் இவர் அழைக்கிறார் என்றும் கவுரி அம்மாள் குறிப்பிட்டார். நாட்டின் புதிய சூழலில் இன்றும் செங்கொடித் தாய் நம்மோடு இருப்பது பெருமைக்கும் வணக்கத்திற்கும் உரியது.