நாகர்கோவில்:
தனது 16 வயது மகளை கடத்திச் சென்றவர்கள் மீது நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தாயார் மேல்முறையீடு செய்துள்ளார்.
குமரி மாவட்டம் கிருஷ்ணன் கோயில் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வியாழனன்று குமரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். எனக்கு பதினாறு வயதில் ஒரு மகளும், 14 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் எனது பக்கத்து வீட்டில் நடைபெற்ற கட்டிட பணிக்கு கொத்தனார் வேலை செய்ய வந்த லெவிஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் (26) என்பவர் எனது மகளிடம் நட்பு முறையில் பேசி, அவளை வசீகரித்து ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். வேல்முருகன், பள்ளிவிளை பகுதியிலுள்ள மாரி (50) ஆகிய இருவரும் சேர்ந்து என் மகளை ஏமாற்றி கடத்திச் சென்று மறைத்து வைத்துள்ளனர்.
இது சம்பந்தமாக கடந்த 26ஆம் தேதி நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நான் புகார் அளித்தேன். ஆனால் அந்த புகாருக்கு காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் ஆய்வாளர் விடுப்பில் உள்ளார் என்றும் தற்போது போலீசார் தசரா விழாவிற்கு பாதுகாப்பிற்கு சென்றதால் நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் கூறினர். நான் கொடுத்த வழக்கிற்கு போக்சோ வழக்குப்பதிவு செய்யாமல், சாதாரண பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
எனவே எனது மகளை மீட்டுத்தருவதுடன், பாலியல் வன்கொடுமை செய்யும் நோக்கத்துடன் கடத்திச் சென்ற இருவரையும் வழக்குப்பதிந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.