ஜி.ஸ்டாலின் கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம், செப்.28-அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலினை, மயிலாடுதுறை காவல் துறையினர் நள்ளிரவில் கைது செய்து, பொய் வழக்குகள் போட்டுச் சிறையில் அடைத்திருப்பதைக் கண்டித்தும், உடனடியாக ஜி.ஸ்டாலினை விடுவிக்குமாறும் வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வேதாரணியம் ஒன்றியக்குழு சார்பில், புதன் அன்று, தாணிக்கோட்டகம் கடைத் தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, சி.பி.எம். ஒன்றியச் செயலாளர் வி.அம்பிகாபதி தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் மா.முத்துராமலிங்கம், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் கோவை.சுப்பிரமணியன், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் ஏ.வெற்றியழகன், இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் வசந்தா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
இளைஞர்களுக்கு வேலை கேட்டுப் பிரச்சார இயக்கம்
நாகப்பட்டினம், செப்.28- மத்திய மாநில ஆட்சிகளில் வேலையில்லாத் திண்டாட்டம் மிகக் கடுமையாகப் பெருகி வருவதைப் பொது மக்களுக்கு விளக்கிக் கூறவும், இளைஞர்களுக்கு வேலை கேட்டும், மாநிலம் முழுவதும் ‘தெருக்குள்ளே பிரச்சாரம்’ என்னும் இயக்கம், செப்டம்பர்-25 முதல் 29 வரை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் எழுச்சியோடு நடைபெற்று வருகிறது. நாகப்பட்டினம் ஒன்றியம், ஐவநல்லூரில், செப்டம்பர்-25 அன்று, துவங்கிய இந்தப் பிரச்சாரப் பயணத்திற்கு, வாலிபர் சங்கத்தின் நாகை ஒன்றியத் தலைவர் பி.எம்.நன்மாறன் தலைமை வகித்தார். சங்கத்தின் நாகை ஒன்றியச் செயலாளர் ஏ.வடிவேல், பிரச்சாரப் பயணத்தை வழிநடத்தினார். மாவட்டத் தலைவர் ஏ.சிவக்குமார் துவக்கி வைத்து உரையாற்றினார். வழிநெடுகப் பல கிராமங்களில் தெருவுக்குள் வாகனம் மூலம் பொதுமக்களுக்குச் சென்றடையுமாறு பிரச்சாரம் செய்யப்பட்டது. நாகை ஒன்றியம் சிக்கல் கடைவீதியில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், சிறப்புரையாற்றி, நாகை ஒன்றியப்பிரச்சாரப் பயணத்தை நிறைவு செய்து வைத்தார். பிரச்சாரப் பயணத்தில் வாலிபர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜி.சிந்தன், எஸ்.மாலா, நாகை ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வி.பாரதி, கே.அருள்தாஸ் மற்றும் பலர் பங்கேற்றனர்.
இலவச மருத்துவ முகாம்
தஞ்சாவூர், செப்.28- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம், தஞ்சை மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்திய, இலவசப் பொது மருத்துவ முகாம் ராஜாமடம் அரசு மேல்நிலைப்பள்ளியில், வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவர் டி.முகமது நவாஸ்கான் தலைமை வகித்தார். ரோட்டரி சங்கச் செயலர் எஸ்.சாகுல் ஹமீது, பொருளாளர் ஆர்.பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை, ராஜாமடம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தொடங்கி வைத்துப் பேசினார். முகாமில், ராஜாமடம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த 350 நோயாளிகளுக்குத் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை மருத்துவக் குழுவினர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு, உடல் எடை ஆகியவை பரிசோதித்தனர்.முகாமில், 122 பேருக்கு ரூ.200 மதிப்புள்ள இசிஜி இலவசமாக எடுக்கப்பட்டது. மேலும் இருதயம் மற்றும் சர்க்கரை நோய்க்கான சிறப்பு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. இம்முகாமில், ரோட்டரி சங்க நிர்வாகிகள் வைரவன், வெங்கடேஷ், ஜெ.அமீன் நவாஸ்கான், மன்சூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கல்வி பாதுகாப்பு பிரச்சார இயக்கம்
திருச்சிராப்பள்ளி, செப்.28-தேசியக் கல்வி கொள்கை 2019 திரும்பப் பெற வேண்டும். அரசு பள்ளிகளை மூடக்கூடாது. மூடிய பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும். தமிழ்வழிப் பள்ளிகளை அழிக்கும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருச்சி மாவட்டக்குழு சார்பில் வெள்ளியன்று திருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகில் கல்வி பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. பிரச்சாரத்திற்கு மாநிலச் செயலாளர் முருகன் தலைமை வகித்தார். பிரச்சாரத்தில் மாநிலச் செயலாளர் ஹேமலதா, மாநிலத் துணைத்தலைவர் தமிழ்ச்செல்வி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் பேச்சியம்மாள் மாவட்டச் செயலாளர் ஆரோக்கியராஜ், பொருளாளர் இன்னாசி முத்துராபர்ட், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் ஜீவன் ஆகியோர் பேசினர். பிரச்சாரப் பயணத்தை வாழ்த்திச் சிஐடியு மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், தமுஎகச மாவட்டச் செயலாளர் ரங்கராஜன், துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் மாறன் ஆகியோர் பேசினர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் துணைத்தலைவர் இன்னாசிமுத்துலாரன்ஸ் நன்றி கூறினார்.
காவிரி ஆற்றில் தடுப்பணை கட்டக் கோரி சிபிஎம் பிரச்சாரம்
திருச்சிராப்பள்ளி, செப்.28- திருச்சி மாவட்டத்தில் தொட்டியம் முதல் லாலபேட்டை வரை காவிரி ஆற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும். ஏரி, குளம், குட்டைகளைத் தூர்வார வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொட்டியம் வட்டக்குழு சார்பில் வெள்ளியன்று இருசக்கர வாகனப் பிரச்சாரம் கார்த்திகைப்பட்டி முதல் முசிறி வரை நடைபெற்றது. பிரச்சாரப் பயணத்திற்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சிதம்பரம் தலைமை வகித்தார். பிரச்சாரப் பயணத்தை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சிவராஜ், தொட்டியம் வட்டச் செயலாளர் முருகன் ஆகியோர் துவக்கி வைத்தனர். புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் பிரச்சாரப் பயணத்தை முடித்து வைத்துப் பேசினார். பிரச்சாரப் பயணத்தில் ஒன்றியச் செயலாளர்கள் முசிறி நல்லுசாமி, தா.பேட்டை காமராஜ், உப்பிலியபுரம் முத்துக்குமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், முருகேசன் வரதராஜன், முருகானந்தம், மாரிமுத்து, அன்னராசு, சுந்தரம், சின்னதுரை, பழனிவேலு, அண்ணாவி, பாலகிரு~;ணன், ஜெகநாதன், நாகராஜன், பண்ணக்காரன், சுப்ரமணியன் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.முன்னதாகக் கார்த்திகைப்பட்டியில் தொடங்கிய பிரச்சாரம் பாலசமுத்திரம், தொட்டியம் வாணப்பட்டறை கார்னர், தொட்டியம் வெங்கடேசா தியேட்டர், மகேந்திரமங்கலம், சீனிவாசநல்லூர், மணமேடு, முசிறி புதிய பஸ் நிலையம், முசிறி கைகாட்டி வழியாக முசிறி ஆற்றுப் பாதுகாப்பு பொதுப்பணித்துறை அலுவலகத்தை வந்தடைந்தது. பின்னர்ப் பொதுப்பணித்துறை உதவி பொறியாளரிடம் மனு கொடுக்கப்பட்டது.