tamilnadu

img

தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடிய தியாகி சிக்கல் பக்கிரிசாமி நினைவுதினம்....

நாகப்பட்டினம்:
நாகை ஒன்றியம், சிக்கல்- பனைமேடு கிராமம், தியாகி சிக்கல் பக்கிரிசாமியின் 52 ஆம் ஆண்டு நினைவு தின அஞ்சலி நிகழ்ச்சிகள் பனைமேடு மற்றும் சிக்கல் நகரில் நடைபெற்றன.

பனைமேடு கிராமத்தைச் சேர்ந்த பக்கிரிசாமி, இளம் வயதிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, இயக்கவளர்ச்சிக்காகவும் ஏழை - எளிய மக்கள்,விவசாயத்தொழிலாளர்கள், தாழ்த்தப்பட்டமக்களுக்காகவும் அவர்களின் உரிமைக்காகவும் பல்வேறு போராட்டங்களை நடத்திப் பலஉரிமைகளைப் பெற்றுத் தந்தவர்.

இதனால், பண்ணையார்கள், வர்க்க எதிரிகள் பக்கிரிசாமியைக் கொன்றுவிடத் திட்டம் தீட்டி நாள் பார்த்திருந்தனர். 1968 நவம்பர் 16 அன்று இரவு நாகையில் நடந்த கட்சிப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு, சைக்கிளில்சிக்கல் திரும்பி வரும்போது, சிக்கல் கடைத்தெருவில் எதிரிகள் பக்கிரிசாமியை அரிவாள்,ஆயுதங்களால் வெட்டி, ஒரு சிறு பாலத்தின் அடியில் எறிந்து சென்றனர். அவரின் சிதைக்கப் பட்ட உடல் மறுநாள் காலையில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. 1968, டிசம்பர் 25 அன்று,வெண்மணி தியாகிகள் எரிக்கப்பட்டதற்கு 39 நாட்களுக்கு முன்பு, ஓர் அபாய எச்சரிக்கைபோல இந்தக் கொடிய சம்பவம் நடந்தது.

திங்கட்கிழமை தியாகி பக்கிரிசாமியின் 52- ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சிக்கு சிபிஎம் நாகை ஒன்றியச் செயலாளர் பி.டி.பகு தலைமை வகித்தார். பனைமேட்டில், தியாகிபக்கிரிசாமி நினைவுக் கல்வெட்டுக் கொடிக் கம்பத்தில் சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் எம்.சுப்பிரமணியன் கட்சிக் கொடியை ஏற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் பி.கே.ராஜேந்திரன் பக்கிரிசாமி உருவப் படத்தைத் திறந்து வைத்தார். கிராமப் பொதுமக்கள் மலரஞ்சலி செலுத்தினர்.சிக்கல் நகரில், சிபிஎம் அலுவலகம் முன்பு, இயக்கக் கொடியை மாநிலக் குழு உறுப்பினர்  வி.மாரிமுத்து ஏற்றி வைத்தார். தியாகி பக்கிரிசாமி உருவப்படத்தை மாவட்டச் செயலாளர் நாகைமாலி திறந்து வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பலரும் மலரஞ்சலி செலுத்தினர்.