tamilnadu

img

தூத்துக்குடி: புதுமணத் தம்பதி கொலை - பெண்ணின் தந்தை கைது

தூத்துக்குடியில் புதுமணத் தம்பதியான கார்த்திகா - மாரிசெல்வம் வெட்டி கொல்லப்பட்ட வழக்கில், கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கத்தை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடியில் கூலித்தொழிலாளி வசந்தகுமார் என்பவரின் மகன் மாரிச்செல்வம் (23), தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவரும் பால் வியாபாரம் செய்து வரும் முத்துராமலிங்கம் என்பவரின் மகள் கார்த்திகாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த காதல் ஜோடி, தேவர் ஜெயந்தி அன்று வீட்டை விட்டு வெளியேறி, நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் நேற்று 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் புதுமணத் தம்பதியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். 
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இருவரது உடல்களை மீட்டு உடற்கூறாய்வு செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கத்தை போலீசார் இன்று கைது செய்தனர். அவரது உறவினர்கள் கருப்பசாமி, பரத் உள்ளிட்ட 3 குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.