சென்னை, பிப். 19- நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 10வது முறையாக சமர்ப்பித்துள்ள பட்ஜெட் பாராட்டும்படியாக இல்லை. பஞ்சுமிட்டாய் போல் இருக்கிறது என்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் விமர்சித்தார். 2020-21 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதன் சுருக்கம் வருமாறு: திமுக ஆட்சியில் 8.96 விழுக்கா டாக இருந்த பொருளாதார வளர்ச்சி தற்போது 7.27 விழுக்காடாக வீழ்ந்துள் ளது. 2012-13 ஆம் ஆண்டிலிருந்து கட்டமைப்பு திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் என்ன செய்துள்ளீர்கள்?
15வது நிதிக்குழு மாநிலங்களுக்கான நிதியை குறைத்தபோது கேரள மாநில முதலமைச்சர் கடிதம் எழுதி 11 மாநில நிதியமைச்சர்கள் குடியரசு தலைவரை சந்தித்து முறையிட்டனர். ஆனால், இந்த அநியாய நிதிகுறைப்புக்கு எதிராக அதிமுக தீவிரம் காட்டாததால் பெரும் பகுதி தமிழகத்திற்கு நிதி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, நிதியமைச்சர் ஏற்கெனவே கூறியபடி அடுத்த 4 ஆண்டுகளில் தனிநபர் வருமானத்தை 6 லட்சமாக உயர்த்த என்ன செய்யப் போகிறார்?
நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்: நிதிக்குழுக்களின் பரிந்துரைகளால் ஏற்பட்ட பாதிப்பு, மானிய குறைப்பு குறித்து மத்திய அரசிடம் கூறியிருக்கிறோம். விதிகளில் சில திருத்தங்களை செய்திருக்கிறார்கள்.
துரைமுருகன்: பொதுப்பணித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி முழு மையாக செலவிடப்படாத நிலை உள்ளது. அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை எப்போது நிறைவேறும்? மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் எப்போது எடுத்துக் கொள்ளப்படும்?
முதலமைச்சர்: அத்திகடவு-அவினாசி திட்டம் ஓராண்டுக்குள் முடிக்கப்படும். மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் மத்திய அரசு திட்டம். அதன் வடிவமைப்பு மாற்றி அமைக்கப்படு வதோடு, அதன் நீளமும் அதிகரிக்கப்பட உள்ளது. கோவை விமான நிலையம் - உப்பிலிபாளையம் உயர்மட்டசாலை பணிகள் விரைவில் தொடங்கும்.
துரைமுருகன்: நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டாலுக்கு சத்திஷ்கர் மாநில அரசு 2 ஆயிரத்து 650 ரூபாய் வழங்குகிறது. வேளாண் விஞ்ஞானி சாமிநாதன் 3 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்கிறார். தமிழக அரசு ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும்.
அமைச்சர் காமராஜ்: தமிழக அரசு குவிண்டாலுக்கு 1905 ரூபாய் வழங்குகிறது. மத்தியஅரசு நிர்ணயித்துள்ளதை விட கூடுதலாக 50 முதல் 70 ரூபாய் வரை தரப்படுகிறது. இவ்வாறு விவாதம் நடைபெற்றது.