tamilnadu

img

கடைமடைக்கு தண்ணீர் திறந்து விடக் கோரி ஆர்ப்பாட்டம்

குடவாசல், ஆக.31- தமிழக அரசின் அலட்சியம் காரணமாக கால தாமதமாக துவங்கிய குடிமராமத்து பணிகள் முறையாக நடைபெறாததால் கடந்த 17-ஆம் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறந்தும் தற்போது வரை விவசாயம் செய்ய தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றத்துடன் உள்ளனர். சம்பா சாகுபடி செய்ய கடைமடை பகுதி வரை உடனே பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக் கோரி விவசாயிகள் சங்கம் சார்பாக சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் வி.பி.சிந்தன் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் டி.ஜி.சேகர் தலைமை ஏற்றார். மாவட்ட தலைவர் எஸ்.தம்புசாமி கண்டன உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் எப்.கெரக்கோரியா, ஒன்றிய செயலாளர் ஆர்.லட்சுமி மற்றும் வி.ச., வி.தொ.ச.வினர் கலந்து கொண்டனர். கொரடாச்சேரி வெட்டற்று பாலம் அருகே விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் டி.ஜெயபால் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கந்தசாமி கண்டன உரையாற்றினார். கட்சியின் ஒன்றிய செயலாளர் கே.சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வலங்கைமான் ஆலங்குடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வி.ச.மாவட்ட துணை செயலாளர் கே. சுப்பிரமணியன், விவசாயிகள் தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் என்.பாலையா ஆகியோர் கண்டன உரையாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வலங்கைமான் ஒன்றிய செயலாளர் என்.இராதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  நீடாமங்கலம் பெரியார் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் வி.பூசாந்திரம் தலைமையில் மாவட்ட செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள் கண்டன உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சோம. ராஜமாணிக்கம், நகர செயலாளர் சிடி.ஜோசப், வி.தொ.ச. ஒன்றிய செயலாளர் டி.அண்ணாதுரை உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.