நன்னிலம் ஒன்றியத்தில் மணல் கொள்ளையை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்
நன்னிலம், ஆக.29-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நன்னிலம் ஒன்றியத்தில் நடைபெறும் மணல் கொள்ளையை கண்டித்து திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள பேரளம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் டி.வீரபாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் தியாகு ரஜினிகாந்த், மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாநிலக்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.மாரிமுத்து ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர்.
மாநில ஏரோபிக்ஸ் போட்டி பரணி வித்யாலயா சாம்பியன்
கரூர், ஆக.29- ஏரோபிக்ஸ் விளையாட்டு சங்கம் சார்பில் மாநில அளவில் மாவட்டங்களுக்கு இடையேயான ஏரோபிக்ஸ் போட்டிகள் சேலத்தில் நடைபெற்றது. இதில் கரூர் மாவட்ட அணியாக பரணி வித்யாலயாவைச் சேர்ந்த மாணவிகள் செல்சியா கேத்ரின், இனியா, தீகஷிதா, பூர்வஸ்ரீ, ஜானுமயா, ஸ்ரீதன்யா, ஜஹானா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர். மற்றொரு பிரிவில் இனியா, நிசிதா, ஜஸ்மிதாஸ்ரீ, அக்சயா, நிஹாலினி, நித்யஸ்ரீ, பவித்ரா, ஸ்வேதா, சமிக்ஸா, ஹேமந்த் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர். 19 வயது பிரிவில் ராஜேஸ்வரி, மதுமிதா, சுபிக்ஸா, சுதர்ஷினி, தமிழினி, மோனிஷா, ஸ்ரீமீனாதர்ஷினி, வர்ஷினி, சுகிர்ஷா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர். மேலும் தனிநபர் 14 வயது பிரிவில் சஸ்டிகா தங்கப் பதக்கத்தையும், 16 வயது பிரிவில் சங்கமித்ரா தங்கப் பதக்கத்தையும் வென்றனர். 14 வயது பிரிவில் ஹேமந்த் வெள்ளிப் பதக்கம், 12 வயது பிரிவில் செல்சியா கேத்ரின் வெண்கலப் பதக்கம் வென்றனர். குழு போட்டிகளில் அனைத்து பிரிவுகளிலுமே தங்கப் பதக்கத்தை பெற்றதுடன் புள்ளிகள் அடிப்படையில் மாநில அளவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றனர். சாம்பியன் பட்டம் வென்ற பரணி வித்யாலயா மாணவ, மாணவிகளுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் பரணி பார்க் கல்விக்குழும தாளாளர் மோகனரெங்கன், செயலாளர் பத்மாவதி மோகனரெங்கன், பரணி பார்க் கல்விக்குழும முதன்மை முதல்வர் முனைவர் சி.ராமசுப்பிரமணியன், பரணி வித்யாலயா பள்ளி முதல்வர் சுதாதேவி, துணை முதல்வர் ஸி.பிரியா ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.