tamilnadu

img

அரசு பள்ளிக்கு உதவிய காப்பீட்டு கழக ஊழியர் சங்கம்

திருவள்ளூர், டிச.7 - காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் சென்னை கோட்டம் 2-ன் சார்பில் டாக்டர் அம்பேத்கர் நினைவு கல்வி உதவிகள் வழங்கும் விழா நத்தம் அரசுப் பள்ளியில் வெள்ளியன்று (டிச.6) நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள நத்தம் கிராமத்தில் 1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி கடந்த 15 ஆண்டுகளாக நடுநிலைப்பள்ளியாக செயல்பட்டு வருகிறது. தற்போது 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த சுமார் 8 ஆண்டுகளாக பாதுக்கப்பட்ட குடிநீர் இல்லை. கழிவறைகள் இருந்தும் அதை பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இந்நிலையில் நத்தம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் இ.ராஜேந்திரன் காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்திடம் பள்ளிக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதனை தொடர்ந்து காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தினர் ரூ.3 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வசதி, கழிவறை வசதி, வகுப்பறை சீரமைப்பு போன்றவற்றை ஏற்படுத்தியுள்ளனர். இதனை ஒப்படைக்கும் விழா  சங்கத்தின் அமைப்பாளர் கே.துளசி தலைமையில் வெள்ளியன்று நடைபெற்றது. தென்னிந்திய மண்டல துணைத் தலைவர் கே.சாமிநாதன், பொதுச் செயலாளர் எம்.தனசெல்வம், இணை அமைப்பாளர் மாலினி சுப்பிரமணியன், துணைத் தலைவர்கள் ஆர்.சர்வமங்களா, வி.ஜானகிராமன், மாவட்ட கல்வி அலுவலர் ரவி, வட்டார கல்வி அலுவலர்கள் பூவராக மூர்த்தி, முனிராஜசேகர், பள்ளிக்கு 7 செண்ட் நிலம் வாங்கி கொடுத்த ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவருமான இ.ராஜேந்திரன் உட்படபலர் கலந்து கொண்டனர். தற்போது பள்ளியின் மேற்கூரை பழுதடைந்துள்ளது. இதனை கான்கிரட் தளமாக  அமைத்து தரப்படும் என லைன்ஸ் கிளப் முன்வந்துள்ளது. அரசு பள்ளிக்கு உதவி செய்த காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தை கிராம மக்கள் வெகுவாக பாராட்டினர்.