திருவண்ணாமலை,ஆக.21- திருவண்ணாமலை மாவட்டம் போளூரிலிருந்து திருவண்ணாமலைக்கு பள்ளி கல்லூரி நேரத்தில் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போளூர் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து பள்ளி, கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு தினசரி நூற்றுக்கணக்கான மாணவர்கள் திருவண்ணாமலைக்கு செல்கின்றனர். இதுபோல் மாவட்டத் தலைமை அலுவலகங்களுக்கு அரசு ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் சென்று வருகின்றனர். குறிப்பாக காலை 7 மணி முதல் 9 மணிவரை கூட்டநெரிசல் அதிகமாக இருக்கும். இதனால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பேருந்து படிகளில் தொங்கிக்கொண்டு செல்லும் அபாய நிலை உருவாகி வருகிறது. எனவே, நெரிசல் அதிகமாக ஏற்படும் இந்த நேரங்களில் கூடுதலாக நகரப் பேருந்து இயக்க வேண்டும் என, பயணிகளும், பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.