திருவண்ணாமலை, மே 21-திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வேலைத் திட்டப் பணியாளர்களுக்கு குடிநீர் உள்பட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, விவசாயிகள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உழவர் பேரவை சார்பில், விவசாயிகள் கைகளில் குடைகளைப் பிடித்தபடியும், விழுப்புணர்வு தட்டிகளை ஏந்தியும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஊரக வேலைத் திட்டத்தில் பணியாற்றிய சரோஜா (63) அண்மையில் வெயில் கொடுமையால் இறந்தார். காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.எனவே, தொழிலாளர்களுக்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டும். முதலுதவி சிகிச்சைப் பெட்டி வைக்க வேண்டும். முதியோர்கள், கர்ப்பிணிகள், தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தங்கும் வசதி செய்து தர வேண்டும். வாக்குப்பதிவு நாளில் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.