திருவண்ணாமலை,மே 25-திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் அமர்வதற்காக அமைக்கப்பட்ட இருக்கைகள் சிதிலமடைந்து கிடப்பதால், பயணிகள் வெயிலில்நிற்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே, பேருந்து நிறுத்தத்தை சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை –வேலூர் சாலையில் கலசபாக்கம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டது. திருவண்ணாமலை -வேலூர் சாலையிலிருந்து, கடலாடி, புதுப்பாளையம், செங்கம் செல்லும் சந்திப்பாகவும் இந்த கலசபாக்கம் திகழ்ந்து வருகிறது. எனவே, தினசரி நூற்றுக்கணக்கான பயணிகள் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியின் போது, பயணிகள் இருக்கையுடன் கூடிய புதிய நவீன பேருந்துநிழற்குடை அமைக்கப்பட்டது. தற்போது, நிழற்குடையின் உட்பகுதியில் பயணிகள் அமரும் இருக்கைகள் உடைந்து கிடக்கிறது. அரசியல் மற்றும் வணிக நிறுவனங்களின் விளம்பர போஸ்டர்கள் ஒட்டும் இடமாக மாறிவிட்டது. எனவே, கடும் கோடைகாலத்தை கருத்தில் கொண்டு, கலசபாக்கம் பேருந்து நிறுத்தத்தை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதிமக்கள் வலியுறுத்துகின்றனர்.