tamilnadu

img

முதல் தடவை போடும் ஓட்டு கடைசி ஓட்டாக மாறிவிடாமல் தடுக்க மோடியை தோற்கடிப்பீர்

திருப்பூர், ஏப்.14-நாடாளுமன்ற தேர்தலில் முதல் தடவை ஓட்டுப் போடும் இளைஞர்களின் ஓட்டு கடைசி முறையாக போடப்பட்ட ஓட்டாக மாறிவிடாமல் தேர்தல் முறை நம் நாட்டில் தொடர வேண்டுமானால் இளைஞர்கள் மோடியை தோற்கடிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் கூறினார். திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் கே.சுப்பராயனை ஆதரித்து சனிக்கிழமை ஊத்துக்குளி, ராக்கியாபாளையம் பிரிவு, வெங்கடேஸ்வரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கே.தங்கவேல் பேசியதாவது:இப்போது நடக்க இருப்பது முக்கியமான தேர்தல். தப்பித்தவறி மோடி மீண்டும் வெற்றி பெற்றால் இனிமேல் தேர்தலே நடக்காது. இதுதான் கடைசி தேர்தல். இதை நாங்கள் சொல்லவில்லை. அமித்ஷாவே சொல்கிறார். மோடி வெற்றி பெற்றால் இனி அவர்தான் நிரந்தர பிரதமர் என்றார் அவர். பாஜக மற்ற கட்சிகளைப் போல் அல்ல, இது பாசிச தன்மை கொண்ட கட்சி. கடந்த தேர்தலில் பாஜக கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. விவசாய விளைபொருள் விலை ஒன்றரை மடங்கு தருவோம், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம், விலைவாசியை குறைப்போம் என்ற வாக்குறுதிகள் என்ன ஆனது? பெட்ரோல், டீசலில் 22 ரூபாய்க்கு மேல் வரி உள்ளது. இதை குறைத்தாலே அத்தியாவசிய பொருட்கள் விலையைக் குறைக்க முடியும். ஆனால் செய்யவில்லை.ஜிஎஸ்டி வரியை கொண்டு வந்ததற்காக பட்டாசு வெடித்து, இனிப்பு கொடுத்து கொண்டாடிய கட்சி பாஜக. ஆனால் கோவை வந்த மோடி இப்போது ஜிஎஸ்டி வரியை குறைப்போம் என்கிறார்.


மக்களின் கோபத்தால்தான் மூன்று மாநிலங்களில் பாஜக தோற்றது. இப்போது தோற்ற பிறகு விவசாயிகளுக்கு பணம் தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளனர்.பொங்கலுக்கு ரூ.1000 கொடுத்ததை வைத்து வெற்றி பெறுவோம் என அதிமுக சொல்கிறது. ஆனால் ஜெயலலிதாவையே பர்கூர் தொகுதியில் மக்கள் தோற்கடித்தனர் என்பதை மறந்து விடக்கூடாது. இப்போது ஒரே ஓட்டில் மத்திய அரசையும், மாநில அரசையும் தோற்கடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.மக்களின் அடிப்படையான தொழில், விவசாயம், கல்வி, மருத்துவம் போன்ற பிரச்சனைகளையும் விவாதிப்பதை விட்டுவிட்டு மோடி பாகிஸ்தான் பற்றியும், தனிப்பட்ட வீரதீரம் பற்றியும் பேசி திசை திருப்பி வருகிறார். இந்த முக்கியமான தேர்தலில் பாஜக, அதிமுகவை மக்கள் படுதோல்வி அடையச் செய்ய வேண்டும்.இளந்தலைமுறையினர் போடும் முதல் ஓட்டு முக்கியமானது. இதை கவனமாக பயன்படுத்தும்படி மோடி சொல்லி இருக்கிறார். உண்மைதான் இளைஞர்கள் போடும் முதல் ஓட்டு கடைசியாக போடும் ஓட்டாக இல்லாமல் இருக்க, மீண்டும் நாட்டில் தேர்தல் முறை தொடர மோடியை தோற்கடிக்க வேண்டும்.இவ்வாறு கே.தங்கவேல் பேசினார்.இக்கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், கொமதேக, விசிக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி ஊழியர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

;