tamilnadu

img

நகர்ப்புற உள்ளாட்சிகளில் மக்கள் குரல் ஒலிக்க மார்க்சிஸ்ட் கட்சிக்கு வாக்களிக்க வேண்டுகோள்

திருப்பூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளில் சாமானிய ஏழை, எளிய, நடுத்தர, உழைப்பாளி மக்களின் குரல் ஒலிக்கவும், மக்கள் நலன் காக்கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யும்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் வெள்ளிக்கிழமை மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மாநகராட்சியில் 8 வார்டுகள், திருமுருகன்பூண்டி நகராட்சியில் 5 வார்டுகள் மற்றும் உடுமலை, தாராபுரம், வெள்ளகோவில், பல்லடம் நகராட்சிகளில் தலா 1 வார்டு வீதமும், அவிநாசி, ஊத்துக்குளி, குன்னத்தூர், கொளத்துப்பாளையம், சின்னக்காம்பாளையம் ஆகிய பேரூராட்சிகளில் 6 வார்டுகள் உள்பட மாவட்டத்தில் மொத்தம் 40 வார்டுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களம் காண்கிறது.
திருப்பூர் மாவட்டத்தில் உழைப்பாளி மக்களின் நலன் காக்க தொடர்ந்து பாடுபடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படும்போது பின்வரும் பணிகளை நிறைவேற்றப் பாடுபடுவோம் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

திருப்பூர் மாநகராட்சி

மாநகரின் இணைக்கப்பட்ட பகுதிகள் உள்பட அனைத்து குடியிருப்புகளிலும், மக்களுக்கு இரண்டு நாளுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கவும், நான்காவது குடிநீர் திட்டத்தை விரைந்து நிறைவேற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், மாநகரில் விடுபட்ட பகுதிகளை பாதாளச் சாக்கடை திட்டத்தில் முழுமையாக இணைத்து முறையான கழிவுநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துவோம்.

மாநகரின் மக்கள் தொகைக்கு ஏற்ப மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் எண்ணிக்கை நிரப்பப்படாமல் உள்ளது. 3000 தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சி மூலம் நேரடியாக பணியமர்த்திட வலியுறுத்துவோம். தூய்மைப் பணியை தனியார்மயம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் செயல்படுத்துவதை கைவிட்டு, அனைத்து தூய்மைப் பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்து உரிய பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

மாநகரில் விரிவாக்கப் பகுதிகள் உள்பட அனைத்து குடியிருப்புகளிலும் வீதி விளக்குகள் முழுமையாக அமைத்திடவும், தனியார் மூலம் பராமரிப்பு பணி என்ற தோல்வி அடைந்த திட்டத்தை கைவிட்டு, நேரடியாக மாநகராட்சி மூலம் பராமரிப்பு பணி மேற்கொள்ளவும்  வற்புறுத்துவோம்.

அனைத்து குடியிருப்புகள், நகரின் பிரதான சாலைகள் என குண்டும், குழியுமான அனைத்து சாலைகள், வீதிகளையும் சீரமைத்து புதிதாக தார்ச்சாலை அமைக்கவும், தேவையான பகுதிகளில் காங்கிரீட் சாலைகள் தரமான முறையில் அமைக்கவும் வலியுறுத்துவோம்.

நகரில் குடியிருப்பு பகுதி குப்பையையும், தொழிற்சாலை குப்பையையும் தனியாகப் பிரித்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை திறம்பட செயல்படுத்தவும், இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண அறிவியல் அறிஞர்கள், வல்லுநர்களை கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநகராட்சியில் குரல் கொடுப்போம்.

சொத்து வரி விதிப்பு, குடிநீர் கட்டணம் ஆகியவற்றில் சாமானிய, ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதிக்காத வகையில் நிதியாதாரத்தை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனைப் பிரிவு அங்கீகாரம், கட்டிட வரைபட அனுமதி ஆகியவற்றுக்கு அபரிமித கட்டணம் வசூலிப்பதை மாற்றி நியாயமான கட்டணம் நிர்ணயிக்க வலியுறுத்துவோம்.

குடிநீர் குழாய் இணைப்பு, சொத்து வரி நிர்ணயம் உள்ளிட்ட மாநகராட்சி பணிகளில் ஊழல் நடவடிக்கைகளை களைந்து, தகுதி உள்ள அனைவருக்கும் உரிய சேவை நியாயமான கட்டணத்தில் கிடைப்பதை உத்தரவாதம் செய்வோம்.

மருத்துவம்

மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள தாய் சேய் நல விடுதிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கவும், போதுமான மருத்துவ உபகரணங்கள் மற்றும் நோயாளிகளுக்கு உரிய உயிர் காக்கும் முக்கிய மருந்துகள் மற்றும் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற நீண்ட கால நோய்களுக்கு உரிய மருந்துகள் தேவையான அளவு இருப்பு வைத்து தடையின்றி  வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கல்வி

மாநகராட்சி கல்வி நிதியை முழுமையாக கல்வி நிறுவனங்களுக்கு செலவிடுவதை உத்தரவாதம் செய்வோம். அனைத்து மாநகராட்சிப் பள்ளிகளிலும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிப்பிட வசதி அதற்கான நிரந்தர தூய்மைப் பணியாளர்கள் நியமனம் மற்றும் இரவுக் காவலர், சுற்றுச்சுவர், வகுப்பறைகளுக்குத் தேவையான மேஜை, நாற்காலிகள் முழுமையாக ஏற்பாடு செய்யவும், மாணவியர் பள்ளிகளில் தானியங்கி நாப்கின் வழங்குவது, பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை எரியூட்டும் மின்சாதனம் முழுமையாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். விளையாட்டு மைதானங்களை வேறு பயன்பாட்டுக்காக எடுத்துக் கொள்வதை தடை செய்து, தேவையான விளையாட்டு உபகரணங்கள், கருவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகள், சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்படும்.

சேரிப் பகுதி மேம்பாடு

மாநகரில் உள்ள அனைத்து சேரிப் பகுதிகளிலும் குடிநீர், சாலை, சாக்கடை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் முழுமையாக செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். உழைக்கும் மக்கள் பல லட்சம் பேர் வாழும் இந்த மாநகரில் அவர்களுக்கு போதிய பொழுது போக்கு வசதி இல்லை. எனவே ஏற்கெனவே இருக்கும் பூங்காக்களை மேம்படுத்தவும், அனைத்து வார்டுகளிலும், குடியிருப்புகளிலும் ரிசர்வ் சைட்டுகளை ஆக்கிரமிப்பில் இருந்தால் முழுமையாக அகற்றவும், பூங்கா, விளையாட்டு மற்றும் நடைபயிற்சி மைதானம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏழை, எளிய குடும்பத்தாரின் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு வசதியாக, நான்கு மண்டலங்களிலும் அனைத்து வசதிகளுடன் திருமண மண்டபங்கள் கட்டப்படும்.

மாநகரில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களிலும் பயணிகள் மற்றும் பயனாளிகளுக்கு உரிய குடிநீர், கழிப்பிடம், நிழற்குடை, இருக்கைகள், பேருந்துகள் கால அட்டவணை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், சுகாதாரமான பராமரிப்பு செய்யப்படும்.

தனி மிதிவண்டி பாதை

சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு குறித்து உலகளாவிய விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், மாநகரில் முக்கிய பாதைகளில் தனி மிதிவண்டி (சைக்கிள்) பாதைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சீர்மிகு நகரத் திட்டத்தில் இது குறித்து குறிப்பிடப்பட்டிருந்தாலும் இதுவரை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இத்திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்துவோம்.

டவுன்ஹால் மைதானத்தில், வாகன நிறுத்தமும், கூட்ட அரங்கமும் கட்டப்பட்டாலும், கலை, இலக்கிய, கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு கலையரங்கம் மற்றும் கருத்தரங்க கூடம் ஏற்படுத்த வேண்டும்.

இலவச வை-பை வசதி

பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் இலவச வை-பை தகவல் தொடர்பு வசதி ஏற்படுத்த வேண்டும்.

நகரில் உழைக்கும் மக்களுக்கு வீட்டு வசதி பெரும் பிரச்சனையாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. நீர் நிலைகள், நீர் வழித்தடங்களுக்கு பாதிப்பில்லாத அரசு புறம்போக்கு இடங்களில் ஏற்கெனவே பல ஆண்டுகளாக குடியிருப்போருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கி அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். தூய்மைப் பணியாளர்கள், சமூகரீதியாக நலிவடைந்த, ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் குடியிருப்புகளை மேம்படுத்தி சிறப்பு கவனம் செலுத்தி தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்து தர வேண்டும்.

அடுக்குமாடி குடியிருப்புகள் தேவைக்கேற்ப அமைத்து தர வேண்டும், உழைக்கும் பெண்கள் விடுதிகள் மற்றும் இளைஞர்களுக்கு டார்மெட்ரி எனப்படும் தங்குமிட வசதிகள் ஏற்படுத்தப்படும்.

அறிவியல் கோளரங்கம்

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி குமரன் நினைவகம் மாணவர்கள், இளைஞர்களுக்கு சுதந்திரப் போராட்ட வரலாற்றை அறிந்து உணர்ந்து கொள்வதற்கு ஏற்ப புதுப் பொலிவுடன் மேம்படுத்தப்படும். இந்நகரின் சுதந்திரப் போராட்ட வீரர்கள், அவர்களது பணிகள் பற்றிய வரலாற்று கண்காட்சி ஏற்படுத்தப்படும்.

குழந்தைகளுக்கு அறிவியல் மனப்பான்மையை ஊட்டி வளர்க்கும் விதத்தில் அறிவியல் பூங்கா, கோளரங்கம் ஆகியவை அமைத்திட வலியுறுத்துவோம்.

நகரை அழகுபடுத்தும் திட்டம் என்றும், போக்குவரத்துக்கு இடையூறு என்றும் சாலையோர, வீதியோர வியாபாரிகளை அப்புறப்படுத்துவதை ஏற்க முடியாது. சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு மத்திய சட்டப்படி அவர்களுக்கு அடையாள அட்டை கொடுத்து, போக்குவரத்துக்கும், மக்களுக்கும் பாதிப்பில்லாமல், அதே சமயம் அவர்கள் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக் கூடிய முறையில் நடைபாதை கடைகள் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

நொய்யல் நதி பாதுகாப்பு

நாகரிகத்தின் தொட்டில்கள் எனப்படும் நதிக்கரைகள் இன்றைய வாழ்க்கை முறை காரணமாக தற்போது திறந்தவெளி சாக்கடைகளாக, குப்பைத் தொட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன. திருப்பூருக்கு அழகு சேர்க்கும் நொய்யல் நதியில் கழிவுகள், குப்பைகள் கொட்டாமல் தடுத்து புத்துயிர் ஊட்ட தன்னார்வ அமைப்புகள், தொண்டு நிறுவனங்களையும் இணைத்துக் கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

நகராட்சி, பேரூராட்சிகளில்

நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மக்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க வலியுறுத்துவோம். நகரம், பேரூராட்சிகளில் தினமும் முறையாக குப்பைகளை அகற்றிடவும், தேவையான தூய்மைப் பணியாளர்களை நியமிக்கவும் வலியுறுத்துவோம். கழிவுநீர், சாக்கடை வடிகால் வசதி அனைத்துப் பகுதிகளிலும் ஏற்படுத்தவும், முறையாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்.

அனைத்து சாலைகள், வீதிகளிலும் தெரு விளக்கு அமைக்கவும், முறையாக பராமரிக்கவும் வலியுறுத்துவோம்.

சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை சாமானிய, ஏழை, எளிய மக்களை பாதிக்காத வகையில் நியாயமான முறையில் நிர்ணயிக்க வலியுறுத்துவோம். நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் ஆகியவற்றுக்குத் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கவும், போதுமான மருந்துகள் கையிருப்பு வைத்து அனைத்து நாட்கள் இயங்குவதை உறுதிப்படுத்த வலியுறுத்துவோம்.

நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான ஆசிரியர்கள், வகுப்பறை கட்டமைப்பு வசதி, சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிப்பிட வசதி, சுற்றுச்சுவர் அமைக்கவும் வலியுறுத்துவோம். அனைத்து உள்ளாட்சி நிர்வாகங்களிலும் அடிப்படை சேவைகள் லஞ்ச, ஊழல் இல்லாமல் மக்களுக்கு கிடைத்திட முயற்சி செய்வோம். எனவே இந்த மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என நகர்ப்புற நகராட்சிகளில் 40 வார்டுகளில் போட்டியிடக் கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை மக்கள் வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். எப்போதும் வீதிகளில் மக்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட்டுகள் உள்ளாட்சி அமைப்புகளில் இடம் பெறும்போது மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், மக்களுக்கு எதிரான பிரச்சனைகளில் மக்களின் மனசாட்சியாக செயல்படவும், அதன் மூலம் மக்கள் நலன் காக்கவும் உறுதியுடன் செயல்படுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் கூறியுள்ளார்.