tamilnadu

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி இந்த ஆண்டும் சரிவு

திருப்பூர், ஏப்.1-


திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் சரிவைச் சந்தித்துள்ளது. எனினும் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததால், முந்தைய ஆண்டை விட டாலர் அளவில் குறைந்தும், ரூபாய்அளவில் அதிகரித்தும் காணப்படுகிறது.கடந்த 2017 – 18 நிதியாண்டில் திருப்பூர்பின்னலாடை ஏற்றுமதி ரூ.24 ஆயிரம் கோடியாக இருந்தது. அதை டாலர் மதிப்பில் கணக்கிட்டால் 3.72 பில்லியன் (372 கோடி) டாலர் ஆகும். தற்போது 2018 – 19 நிதியாண்டு மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. இந்த ஆண்டுக்கான முழு ஏற்றுமதி அளவு விபரம் அடுத்த ஓரிரு வாரத்தில் தெரியவரும். எனினும் கடந்த பிப்ரவரி மாதம் வரை 11 மாத ஏற்றுமதி அளவுடன், மார்ச் மாத ஏற்றுமதி உத்தேச மதிப்பீட்டையும் சேர்த்து இந்த ஆண்டுக்கான ஏற்றுமதி அளவை பின்னலாடை துறையினர் கணக்கிட்டுள் ளனர்.இதன்படி 2018 – 19 நிதியாண்டில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி ரூ.25 ஆயிரத்து 450 கோடி அளவுக்கு வரும் என்று மதிப்பிட்டுள்ளனர். அதேசமயம் இதை டாலர் மதிப்பில் சொல்வதாக இருந்தால் கடந்த ஆண்டு 3.72 பில்லியன் (372 கோடி) டாலராக இருந்தது. இந்த ஆண்டு 3.63 பில்லியன் (363 கோடி) டாலர் அளவாகக் குறையும் என்று தெரி வித்தனர்.இது கடந்த ஆண்டை விட சுமார் இரண்டரை சதவிகிதம் வீழ்ச்சி ஆகும். அதாவது கடந்த ஆண்டு ரூபாய் மதிப்பு மாறாமல் முந்தைய அளவிலேயே இருப்பதாகக் கணக்கிட்டால் தற்போது ஏற்றுமதி அளவு ரூ.23 ஆயிரத்து 419 கோடி மட்டுமே நடைபெற்றதாக அர்த்தம்.அதேசமயம் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு கடந்த 12 மாதங்களில் மிக மோசமான அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாககடந்த 2018ஆம் ஆண்டு நிதியாண்டு தொடங்கிய ஏப்ரல் மாதம் 1 டாலர் என்பது 65 ரூபாயாக இருந்தது. இதன்பிறகு அமெரிக்க அரசின் நட வடிக்கை காரணமாகவும், மோடி அரசின் சந்தை சார்ந்த தவறான கொள்கைகள் காரணமாகவும் ரூபாய் மதிப்பு படுமோசமாக வீழ்ச்சி அடைந்தது.


உச்சகட்டமாக கடந்த அக்டோபர் மாதம் ஒரு டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் 74.70 ஆக வீழ்ந்தது. இப்போது ஒரு டாலர் ரூ.69.50 ஆக உள்ளது. இந்திய பணமதிப்பு வீழ்ச்சி காரணமாகவே திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி கடந்த ஆண்டை விட சுமார் ரூ.1,450 கோடி அதிகரித்ததாக காட்டுகிறது.அகில இந்திய அளவிலும் இதே போல் டாலர் மதிப்பில் ஏற்றுமதி குறைந்தும், ரூபாய் மதிப்பில் சற்று அதிகரித்தும் உள்ளது. ஆனால் ஏற்றுமதி செய்யப்பட்ட ஆடைகளின் எண்ணிக்கை அளவில் கணக்கிட்டால் கடந்த ஆண்டை விட ஏற்றுமதி குறைந்திருக்கிறது. எனினும் ஆடைகள் அளவு ரீதியான விபரம் ஏதும் இல்லை என்று ஏற்றுமதியாளர் சங்க வட்டாரத்தினர் தெரிவித்தனர். 2020க்குள் திருப்பூர் பின்னலாடை வர்த்தகத்தை ரூ.1லட்சம் கோடியாக உயர்த்துவதற்கு நரேந்திர மோடி பிரதமர் ஆவதற்கு முன்பே ஆலோசனை கேட்டார். இப்போது அவரதுஐந்து ஆண்டு கால ஆட்சிமுடியும் நிலையில் பின்னலாடை ஏற்றுமதி பரிதாபகரமான அளவுக்கு சரிந்து விட்டதையே புள்ளிவிபரம் காட்டுகிறது.

;