tamilnadu

அவிநாசி அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு மே 20ல் துவக்கம்

அவிநாசி, மே 16-அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2019-20 ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு மே 20 ஆம் தேதி முதல் மே 22 ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் விடுத்துள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது, அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2019- 20 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் மே 13 ஆம் தேதி கல்லூரி அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து இளங்கலை பிரிவுக்கான (ஆங்கில இலக்கியம், பொருளியல், வணிகவியல், சர்வதேச வணிகம், கணிப்பொறியியல், வேதியியல்) ஆகியபாடங்களுக்கு மொத்தம் 304 மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு கல்லூரி வளாகத்தில் மே 20 ஆம் தேதி முதல்மே22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மே 20 ஆம் தேதிகாலை 10 மணி முதல் 11மணி வரை சிறப்பு பிரிவுக்கான (முன்னாள் இராணுவத்தினரின் குழந்தைகள், விளையாட்டு வீரர்கள், தேசிய மாணவர் படை மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள்) கலந்தாய்வு நடைபெறுகிறது. இதையடுத்து மே 22 ஆம் தேதி வரை பொதுபிரிவினருக்கான கலந்தாய்வு நடை பெறுகிறது. கலந்தாய்வுக்கு வரும்மாணவர்கள் பிளஸ் 1, பிளஸ் 2 சான்றிதழ் நகல்களில் தலைமை ஆசிரியர் கையொப்பம் பெற்று வர வேண்டும். உடன் அசல் மாற்றுச்சான்றிதழ், அசல் சாதிச்சான்றிதழ் ஆகியவற்றையும் கொண்டு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.