அவிநாசி, ஜூன் 2-பருவமழை துவங்க உள்ள நிலையில், அவிநாசி ஒன்றியங்களில் உள்ள குளம்,குட்டைகளை தூர்வார சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அவிநாசி பகுதியில் தாமரைக்குளம், சங்க மாகுளம், சேவூர் குளம், கானூர் குளம், கருவலூர் குளம் ஆகியவை உள்ளன. கடந்தாண்டு பெய்த பருவமழையின் போது குளங்கள் தூர்வாரப்படாததால் தாமரைக்குளம், சங்கமாகுளம் பகுதியிலுள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினார். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், அவிநாசி ஒன்றியங்களில் உள்ள குளம், குட்டைகள் தூர்வாரப்பட்டால் தண்ணீர் அளவு அதிகாரிக்கும். இதனால் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.மேலும் மீன், பறவைகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களுக்கு பயனளிக்கும். அதுமட்டுமின்றி நிலத்தடி நீர் மட்டம் உயரும். அவிநாசி பகுதியைப் பொறுத்தவரை வறட்சி நிறைந்த பகுதியாகவே காணப்படுகின்றது பருவமழையை நம்பியே விவசாயிகள் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு அவிநாசி ஒன்றியங்களில் உள்ள குளம், குட்டைகளை தூர்வார வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.