tamilnadu

அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீருவோம்

திருவில்லிபுத்தூர், ஏப்.3-


அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும். மீண்டும் பாஜக ஆட்சிஅமையும் என திருவில்லிபுத்தூரில் உள்ள ஜீயர்விஷமத்தனமாக பேட்டியளித்துள்ளார். பொதுவாக கோவில்கள் மற்றும் மடங்களில் உள்ள துறவிகள் அன்பை மட்டுமே வலியுறுத்துவார்கள். மேலும் தியானம், பூஜை உள்ளிட்டவைகளை செய்வதையே தங்களது பிறவிக் கடமையாக செய்துவருவார்கள்.ஆனால், திருவில்லிபுத்தூரில் உள்ள மணவாளமாமுனிகள் மடத்தின் ஜீயர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ சுவாமிகள், ஏற்கனவே, ஒருமுறை பேட்டியளித்த போது, எங்களுக்கும் சோடா பாட்டில் வீசத்தெரியும். கலவரம் செய்யத் தெரியும் என பேசியவர். பின்பு, வருத்தம் தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மக்களவைத் தேர்தல் நேரத்தில் பாஜகவின் ஊது குழலாகவே மாறி விட்டார்.செவ்வாயன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். அவருடன் விஸ்வ ஹிந்துபரிஷத் மாநில அமைப்பாளர் சரவண கார்த்திக்என்பவரும் இருந்துள்ளார். அப்போது, அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் சில நாட்களாக இந்து மத கடவுள்கள் குறித்து தவறாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது எனவும் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி, கிருஷ்ண பரமாத்மா குறித்து இழிவாக பேசியுள்ளார். இவர் மாதிரி ஆட்களை நாம் வளரவிடக்கூடாது எனவும் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். பின்பு, பாஜக மற்றும் சங் பரிவார தலைவர்கள் பேசுவது போல், இந்தியாவில் ராமராஜ்யம் தான் மலரும், கிருஷ்ண பகவான் தன் கையில் சுதர்சனச் சக்கரத்தை எடுத்துவிட்டார் என நேரில் கண்டவர் போல வார்த்தைகளை உதிர்த்துள்ளார். மேலும், போகிற போக்கில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீருவோம் என உணர்ச்சி வசப்பட்டு தனது பாஜக விசுவாசத்தை காட்டினார். 

;