தரங்கம்பாடி ஜூன் 16- நாகை மாவட்டம் செம்பனார்கோவில் கடைவீதியில் கடந்த 15 ஆண்டுக்கு முன்பு பொதுமக்கள் நேரத்தைத் தெரிந்து கொள்ளும் வகையில் உயர் கோபுரத்தில் சங்கு அமைக்கப்பட்டது. இந்த சங்கு காலை 5 மணி, 9 மணி, மதியம் 1 மணி, மாலை 5 மணி மற்றும் இரவு 9 மணிக்கு ஒலித்தது. இந்த சங்கின் ஒலி செம்பனார்கோவில், பரசலூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கும், பள்ளி மாணவ மாணவிகள், விவசாயத் தொழிலாளர்கள், வணிகர்களுக்கு மிக பயனுள்ளதாக இருந்தது. தற்போது இந்த சங்கு சரியாக பராமரிக்கப்படாத நிலையில் கடந்த சில ஆண்டாக பழுதடைந்து கிடைக்கிறது. இதனால் சங்கு ஒலிக்காமல் காட்சிப் பொருளாக உள்ளது. எனவே பழுதடைந்த சங்கை சீரமைத்து மீண்டும் ஒலிக்க செய்யுமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.