tamilnadu

img

சுனாமி, கஜா புயல் என பேரழிவை சந்தித்தும் சாதனை முகமாக மீண்டெழும் கீச்சாங்குப்பம் பள்ளி

நாகப்பட்டினம், ஜூன் 14- நாகப்பட்டினம் ஒன்றியத்தில் கடற்கரை ஓரமாக உள்ளது கீச்சாங்குப்பம் மீனவ கிராமமாகும். இங்கு பல சாதனைகள் படைத்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. 2004 டிச.26-ல் சுனாமிப் பேரழிவால் இப்பள்ளி அடியோடு வீழ்ந்தது. 80-க்கும் மேற்பட்ட இப்பள்ளி குழந்தைகள் சுனாமியால் மாண்டு போயினர். இதன்பின் இப்பள்ளியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கவே கீச்சாங்குப்பம் மீனவ மக்கள் அஞ்சினர். கொடையாளிகள், சேவை நிறுவனங்கள், தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றின் உதவியால் வீழ்ந்த பள்ளிக் கட்டடங்கள் எழுந்து நின்றன. இப்பள்ளி தலையாசிரியரும் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவருமான இரா.பாலு மற்றும் ஆசிரியர்களும் கீச்சாங்குப்பத்தில் உள்ள ஒவ்வொரு மீனவர் வீட்டு மக்களையும் சந்தித்துப் பிள்ளைகளை, பள்ளியில் சேர்த்திட எடுத்துக் கூறியபின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் கீச்சாங்குப்பம் பள்ளியில் சேர்க்க ஆரம்பித்தனர். மிக விரைவில் இப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகள், கணினியுடன் கூடிய அறிவியல் ஆய்வுக்கூடம், மின்திரைகள் ஆகியவை ஏற்படுத்தப்பட்டன. தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரியர்களின் கடும் உழைப்பினால் மாணவர்கள் நவீன முறையில் நன்கு கற்றனர். இதனால் இப்பள்ளி, மாவட்ட, மாநில, தேசிய அளவில் சிறந்த பள்ளியாகத் தேர்வு பெற்றது. மேலும் அரசு நடுநிலைப்பள்ளிகளிலேயே அதிக மாணவர்கள் பயிலும் பள்ளியாகவும் பெருமை பெற்றுள்ளது. இந்நிலையில் மீண்டும் இப்பள்ளி சோதனை சந்தித்தது. 2018 நவ.15-ல் வீசிய கஜா புயல் தாக்கியது. கடல் நீர் பள்ளியில் உட்புகுந்ததாலும், புயல் காற்றின் வேகத்தினாலும் வகுப்பறைகள் சேதமுற்றன. ஸ்மார்ட் வகுப்புகளின் நவீன கருவிகளும் செயலிழந்தன. இதன்பின் சற்றும் மனம் தளராமல் மீண்டும் கீச்சாங்குப்பம் மீனவ மக்களும், மீனவப் பஞ்சாயத்தாரும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களும், முன்னாள் மாணவர்களும்  ஒன்றிணைந்து உழைத்து தன்னிறைவுத் திட்டத்தின் மூலமாக ரூ.6 லட்சம் மதிப்பில் மீண்டும் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகள் புத்துயிர் பெற்றன. மேலும் சுனாமியில் மாண்டு போன இப்பள்ளியின்  80 குழந்தைகளின் நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டன. இக்கல்வியாண்டில் இப்பள்ளியில் எல்.கே.ஜி. முதல், 8-ஆம் வகுப்பு வரை சுமார் 150 மாணவர்கள் புதிதாகச் சேர்ந்துள்ளனர். தற்போது இப்பள்ளியில் 500 மாணவ- மாணவியர் பயில்கிறார்கள் என்பது, ஓர் அரசு நடுநிலைப்பள்ளியின் மிகப் பெரிய சாதனையாகும். எத்தனை இயற்கைச் சீற்றங்கள் வந்தாலும், பாதிப்புகள் ஏற்பட்டாலும் மன தைரியமும், விடாமுயற்சியும் இருந்தால் சாதித்துக் காட்டலாம் என்பதற்கு கீச்சாங்குப்பம் அரசுப் பள்ளி இன்று ஓர் எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது. -ந.காவியன்