tamilnadu

img

திருச்சியில் நூறு நாள் வேலை கோரி சாலை மறியல் போராட்டம் தலைவர்கள் கைது - காவல்துறை அராஜகம்

திருச்சி/ சென்னை:
திருச்சியில் 100நாள் வேலை கேட்டு போராட முயன்ற தலைவர்களை மிரட்டி காவல்துறை கைது செய்துள்ளதற்கு,  அகிலஇந்திய விவசாயத்தொழிலாளர்கள் சங்கம் கண்டணம் தெரி வித்துள்ளது.திருச்சி மாவட்டம் இலால்குடி ஒன்றியம் மாடக்குடி ஊராட்சியில் நடப்பாண்டில் இதுவரை நூறு நாள் வேலை வழங்கப்படாததை கண்டித்தும், மாடக்குடி ஊராட்சி செயலாளரிடம் நூறு நாள் வேலை கோரி மனு கொடுத்த 650 தொழிலாளர்களுக்கும் வேலை வழங்க கோரியும் ஜூலை 16 செவ்வாயன்று காலை 10 மணிக்கு பள்ளிவிடை பாலம் அருகில் சாலை மறியல் போராட்டம் நடத்த அறிவிப்பு செய்யப்பட்டது.

இதனடிப்படையில் போராட்டம் நடத்தும்  இடத்திற்கு வந்த பெண்களை, போராட்டம் துவங்குவதற்கு முன்பாகவே இலால்குடி டிஎஸ்பி தலைமையிலான காவல்துறை கைது செய்து போலீஸ் வேனில் பலவந்தமாக  ஏற்றினர். அப்போது டிஎஸ்பி  ராஜசேகர், பெண் தொழிலாளர்களிடம் நூறு நாள் வேலைக்கான ஜாப்கார்டை ரத்து செய்வேன், மரியாதையாக கலைந்து செல்லுங்கள் என சட்ட விரோதமாகவும், வெறித்தனமாகவும் கூச்சல் போட்டார்.அப்போது போராட்டத்தை துவக்கிவைக்க வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்  எம்.ஜெய சீலன் தலையிட்டு, பெண்களை மிரட்டாதீர்கள் என டிஎஸ்பியிடம் கூறினார். உடனே ஜெயசீலனின் சட்டையைப் பிடித்து  இழுத்து சக போலீசார்  துணையுடன் தள்ளுமுள்ளு செய்து வேனில் தூக்கி போட்டு கடுமையாக நடந்துள்ளனர்.

மேலும் விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் ஏ.கனகராஜ்  மற்றும் 90 பெண்கள் உட்பட 136 பேரை கைது செய்துள்ளனர்.இந்த அராஜக சம்பவத்தைக் கண்டித்துள்ள விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர்ஏ.லாசர், பொதுச் செயலாளர்வீ.அமிர்தலிங்கம் ஆகி யோர், “கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நூறு நாள் வேலையைமுழுமையாக அமலாக்கம் செய்ய வேண்டிய பிடிஓவுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கை யை தீர்க்க காவல்துறையும், வருவாய்த்துறையும் நடவடிக்கை  எடுப்பதற்கு பதிலாக கைது செய்து சிறையில்  அடைப்பது போராட்டத்திற்கு தீர்வாகாது” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து லால்குடி  ஆர்டிஓ, இலால்குடி தாசில்தார், பிடிஓ உள்ளிட்ட  அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை மூலம் கோரிக்கைகளை தீர்வுகாண நடவடிக்கை  எடுங்கள் என சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அ. பழநிசாமி பேசியுள்ளார்.  அப்போது இலால்குடி ஆர்டிஓ பேச்சுவார்த்தை நடத்த  தாசில்தார், பிடிஓ-வுக்கு    அறிவுறுத்தியும் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்காதது கண்டிக்கத்தக்கது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.கூலித்தொழிலாளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையில்  காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொண்ட டிஎஸ்பி உள்ளிட்ட காவல்துறையையும், எதைப்பற்றியும் கவலை படாமல் சாலையில் நின்று வேடிக்கை பார்த்து நின்ற தாசில்தார், பிடிஓ-வையும் தலைவர்கள் வன்மையாக கண்டித்துள்ள னர்.வேலை கேட்டு மனுஅளித்தால் வேலை வழங்க வேண்டும் என்ற சட்ட விதிகளை புறந்தள்ளிய வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காவல்துறை அத்துமீறல்களுக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.