tamilnadu

img

நீட் தேர்வு ரத்துக் கோரி போராடிய மாணவர் சங்கத்தினர் கைது

தஞ்சாவூர் ஜூன்.8- தமிழகத்தில், மாணவர்கள் உயிரைப் பறிக்கும் சமத்துவமற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில், வெள்ளிக்கிழமை மாலை தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் பெரியார் சிலை முன்பு சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.அரவிந்த்சாமி தலைமை வகித்தார். "மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்று, மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட மாணவிகளின் குடும்பத்துக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரண நிதி உதவி வழங்க வேண்டும் உள்ளிட்டவை முழக்கமிட்டனர். தகவலறிந்து வந்த தஞ்சாவூர் மேற்கு காவல்துறையினர், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக இந்திய மாணவர் சங்க ஜி.அரவிந்த்சாமி, சிரில் இமான், கியூபா, அபிராமபுரம் உள்ளிட்ட 15 பேரை கைது செய்தனர். மாலை 5 மணிக்கு கைது செய்யப்பட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் இரவு 8 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர். 
 

தரங்கம்பாடி

இதே போல் நாகை மாவட்டம் திருக்கடையூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், நீட் தேர்வால் உயிரிழந்த மாணவிகளின் இறப்பிற்கு நீதி கேட்டும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க வட்ட தலைவர் வீ.எம்.சரவணன் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் கே.பி மார்க்ஸ், பவுல் சத்தியராஜ், மாணவர் சங்க சீர்காழி வட்டச் செயலாளர் கபிலன், சர்மா, கவி,தனுஷ்,ரஷ்யா ஆகியோர் உரையாற்றினர்.    இதே போல் இந்திய மாணவர் சங்கம் சார்பில் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.