அரியலூர், ஜூன் 9- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியவளையம் கிராமத்தில் நடைபெறும் நூறுநாள் வேலையில் ஊதியம் வழங்காததை கண்டித்தும், மேலும் அதில் நடைபெறும் ஊழலை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், ஒரே நபருக்கு இரண்டு 100 நாள் அட்டை போட்டும், 100 நாள் அட்டையில் 6 மற்றும் 7 நபர்களை பொய்யான பெயர்களை சேர்த்திருப்பது போன்ற போலியாக அறிக்கை தயார் செய்து பணம் எடுப்பதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு விவசாயி கவியரசன் தலைமை தாங்கினார். முன்னதாக விவசாயி மகாராஜன் வரவேற்றார். தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் மகாராசன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். நிறைவாக சரஸ்வதி நன்றி கூறினார்.