tamilnadu

தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

ஜூன் 25 பைங்கால் ஊராட்சி  மக்கள் சாலை மறியல்

தஞ்சாவூர், ஜூன் 22- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் பைங்கால் ஊராட்சி மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்களின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 25-ம் தேதி செவ்வாய்க்கிழமை ஏனாதிகரம்பை ஆற்றுப்பாலம் அருகில் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து பைங்கால் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பழனிவேலு, 'பைங்கால் ஊராட்சி சாணாகரை தெற்கு குடியிருப்பில் குடிநீர் வராததை கண்டித்தும், அம்புலி ஆற்றில் நடைபெறும் மணல் திருட்டை தடுக்கக் கோரி பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும், அதை கண்டு கொள்ளாததை கண்டித்தும், பைங்கால் ஆற்றங்கரை இணைப்புச்சாலை கப்பி சாலையாக இருப்பதை தார்ச்சாலையாக மாற்றக்கோரியும், மாவட்ட எல்லை காரணமாக சீரமைக்கப்படாமல் உள்ள பேராவூரணி-கீரமங்கலம் ஊரகச்சாலையில், பைங்கால் பகுதி சாலையை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏனாதிகரம்பை ஆற்றுப்பாலம் அருகில் பேராவூரணி-புதுக்கோட்டை சாலையில் சாலை மறியல் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளார். 

பள்ளி செல்லும் சாலையில் ஆக்கிரமிப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

தஞ்சாவூர், ஜூன் 22- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சேது சாலையில் அமைந்துள்ளது அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் பேராவூரணி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மாணவிகள் பயின்று வருகின்றனர்.  ஒவ்வொரு நாளும் இந்த சாலை வழியாகத்தான் மாணவிகள் பள்ளிக்குச் சென்று வர வேண்டும். பள்ளிக்கு அருகிலேயே மாணவிகள் தங்கும் விடுதியும் அமைந்துள்ளது. இந்நிலையில் சாலையின் இருபுறமும், நடை பாதையையும் சாலையையும் ஆக்கிரமித்து சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மாணவிகள் பள்ளி வந்து செல்வதற்கு இடையூறாகவும் போக்குவரத்திற்கு இடையூறாகவும் இந்த சாலையோர கடைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மக்கள் சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி சாலையோர கடைகளில் பொருட்களை வாங்குவதால் மேலும் அதிக நெரிசல் ஏற்படுகிறது. சாலையில் பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் வந்து போகும் நேரங்களில் மாணவிகள் சாலையின் ஓரத்தில் நடந்து செல்ல முடியவில்லை. மிதிவண்டியில் வரும் மாணவிகள் சாலையின் ஓரமாக நிற்க முடியாததால், சிறுசிறு விபத்துகள் நடக்கின்றன. மிகுந்த ஆபத்தான நிலையில் மாணவிகளை அச்சுறுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சாலையோர கடைகளை அப்புறப்படுத்தர வேண்டும் என வலியுறுத்தி பேராவூரணி வட்டாட்சியர், நெடுஞ்சாலைத் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் கோரிக்கை மனு அளித்தார்.