tamilnadu

img

கூடுதல் பேருந்துகள் வசதி கோரி பெரம்பலூர் ஆட்சியரிடம் மாணவர்கள் மனு

பெரம்பலூர், செப்.16- பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பொது மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் திங்களன்று நடைபெற்றது.  அப்போது பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். அதில், வேப்பந்தட்டையில் செயல்பட்டு வரும் அரசுக் கல்லூரியில் சுமார் 1,300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகிறோம்.  இக்கல்லூரியில் பயிலும் அனைவரும் கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் என்பதால் அரசுப் பேருந்துகளை மட்டுமே நம்பி கல்லூரிக்கு வந்து செல்கிறோம். ஆனால், போதிய பேருந்து வசதி இல்லாததால் உரிய நேரத்துக்கு கல்லூரிக்கு அல்லது வீட்டுக்கு செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. கடந்த 6 ஆம் தேதி பெரம்பலூரில் இருந்து பூலாம்பாடிக்கு சென்ற அரசுப் பேருந்தில் ஏற முயன்ற கல்லூரி மாணவன் ஹரிசுதன், பேருந்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். இதையடுத்து, மாணவ, மாணவிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம்.  இதைத்தொடர்ந்து காவல்துறையினர், அரசுப் போக்குவரத்துக் கிளை மேலாளர் உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தையில் கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தவும், பேருந்து நிறுத்தம் எதிரே வேகத்தடை அமைக்க கோரிக்கை விடுத்தும், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  எனவே, மாணவர்களின் நலனை கருதி கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தவும், வேகத்தடை அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.