tamilnadu

புதுக்கோட்டை ,கரூர் ,சீர்காழி முக்கிய செய்திகள்

பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை, ஜூலை 5 - புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும்  தனியார் தொழிற்கல்லூரி களில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகபிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் (பி.சி, எம்.பி.சி, டி.என்.சி) மாணவ, மாணவியருக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல்  கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு  எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவி த்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு  பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000-க்கு மிகாமல் இருத்தல்  வேண்டும். விண்ணப்ப படிவங்களை, அவர்கள் பயிலும் கல்வி  நிறுவனங்களிலேயே பெற்று  15.10.2019-க்குள் பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் தங்களின் வங்கி கணக்கு விவரங்களை  தவறாது குறிப்பிட  வேண்டும்.1.9.2019-ம் தேதியில் துவங்கும் கல்வி உதவித்தொகை இணையதளத்தில்  (Scholarship Portal) புதுப்பித்தலு க்கான விண்ணப்பங்களை  25.10.2019-ம் தேதிக்கு முன்பும், புதியதிற்கான விண்ணப்பங்களை 30.11.2019-ம் தேதிக்கு  முன்பும் அந்தந்த கல்வி நிறுவனங்கள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தை அணுகவும். 

வாலிபர் பலி

 கரூர், ஜூலை 5 - கரூர் - பழைய திண்டுக்கல் சாலையில் லட்சுமிராம் திரையரங்கத்தை அடுத்து ஒரு தனியார் மொபைல் கடையில் ஆனந்த் (43) என்ற வாலிபர், தனது போனை ரீசார்ஜ் செய்ய கடைக்குள் நுழைந்தபோது, அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லோடு ஏற்றப்பட்ட மினி வேனை அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற மனநலம் பாதிக்கப்பட்டவர் எடுக்க முயற்சித்த போது வாகனம் திடீரென்று செல்போன் கடைக்குள் புகுந்தது. இதில் ரீசார்ஜ் செய்ய வந்த ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நாய் கடித்து மான் பலி

சீர்காழி, ஜூலை 5 - கொள்ளிடம் அருகே சீயாளாம் கிராமம் மேட்டுத்தெரு பகுதிக்கு வியாழனன்று காலை ஒரு புள்ளி மான் ஓடி வந்தது. அதனை பார்த்த தெருநாய்கள் மானை துரத்தி கடித்ததில், புள்ளிமான் அந்த இடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்து சீர்காழி வனச்சரக அலுவலர் கருப்பன் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று இறந்த மானின் உடலை புதுப்பட்டினத்தில் உள்ள வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் புதைத்தனர்.