திருச்சிராப்பள்ளி, அக்,1- தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் அதிகமான ரத்ததான முகாம் நடத்தியவர்களுக்கு தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்ற குழுமம், திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் கிஆபெ மருத்துவக் கல்லூரி சார்பில் பாராட்டு விழா மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய் கிழமை நடைபெற்றது. விழாவிற்கு அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஏகநாதன் தலைமை வகித்தார். விழாவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ரத்த தான கழகம் அதிகமான ரத்ததான முகாம் நடத்தியதை பாராட்டி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஏகநாதன் சான்றிதழ் வழங்கினார். அதனை இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் லெனின், மாவட்ட தலைவர் சந்திரபிரகாஷ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். விழாவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் நிவேதா, காட்டூர் பகுதி துணைத்தலைவர் சந்தோஷ், மணப்பாறை அரசு மருத்துவமனை ரத்த வங்கி அதிகாரி புவனா மற்றும் தன்னார்வ ரத்ததான குழுவினர் கலந்து கொண்டனர். விழாவில் 50-க்கும் மேற்பட்ட தன்னார்வ ரத்ததான குழுவினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக மாவட்ட திட்ட மேலாளர் டாக்டர் மணிவண்ணன் வரவேற்றார். திருச்சி அரசு மருத்துவமனை ரத்தவங்கி அலுவலர் புவனேஸ்வரி நன்றி கூறினார்.