திருச்சி செப்26- திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் ஜீயபுரம் அருகே திண்டுக்கரையிலிருந்து முக்கொம்பு வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கரூர் தேசிய நெடுஞ்சாலை மிகவும் குறுகலாகவும், குண்டும் குழியுமாகவும் உள்ளது. இதனால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலியும் நடந்துள்ளது. பழுதடைந்த இச்சாலையை சீரமைக்கக்கோரி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் திண்டுக்கரை கிராம மக்கள் பலமுறை மனு அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் லெனின், அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர் வினோத் மணி ஆகியோர் தலைமையில் திண்டுக்கரை பகுதி மக்கள் திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குண்டும் குழியுமாக இருந்த சாலையில் வாழைக்கன்றுகளை நடுவதற்காக கொண்டு வந்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் திண்டுக்கரை பகுதி மக்கள் முக்கொம்பு அருகில் அமைந்துள்ள சுங்கச்சாவடிக்கு சென்று அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளிடம் சாலைகள் சரியில்லாததால் யாரும் கட்டணம் செலுத்த வேண்டாம் என பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு சென்ற ஜீயபுரம் காவல் துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இப்பகுதியில் இருவழி சாலை திட்டம் உள்ளதால் விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அளித்த உறுதியின் காரணமாக மறியல் ஒத்தி வைக்கப்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர். போராட்டத்தில் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், எ.செல்லையா, முருகன், கோகுல், கோபால் மற்றும் சமூக ஆர்வலர்கள் அய்யாரப்பன், கருமாச்சலம் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் பங்கேற்றனர். உடனடியாக சாலைகள் சரிபார்க்கும் பணி துவங்கப்பட்டது.