சீர்காழி, ஜூன் 7- அரசு மருத்துவமனைகளில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் கட்டாயமாக இருந்து பணியாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் சீர்காழி பகுதியில் குன்னம், திருமுல்லைவாசல், மாதிரவேளுர், எடமணல், புதுப்பட்டினம், மற்றும் மாங்கணாம்பட்டு ஆகிய இடங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன. நல்லூரில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த சுகாதார நிலையங்களுக்கு தினந்தோறும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். மேலும் பெண்களுக்கான மகப்பேறு சிறப்பு மருத்துவ சிகிச்சைகளும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இரவு நேரங்களில் மருத்துவர் பணியில் இல்லாமல் செவிலியர் மற்றும் மருந்தாளுநர் மட்டுமே பணியில் இருந்து வருகின்றனர். இரவு நேரங்களில் திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுவர்களுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுகிறது. மேலும் கருவுற்ற தாய்மார்கள் உரிய மருத்துவ உதவியை பெற முடியாத நிலை ஏற்படுகிறது. சில மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இரவு நேரங்களில் மருத்துவமனைக்கே வராமல் உள்ளனர். சில மருத்துவர்கள் தனியாக கிளினீக் வைத்து நடத்தி வருவதால் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை அதிக கட்டணம் பெறும் நோக்கில் அவர்கள் வைத்து நடத்தும் மருத்துவமனைக்கே வரச் செய்கின்றனர். இதனால் சில மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளில் கவனம் செலுத்தாமல் உள்ளனர். இதனால் ஏழை- எளிய மக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே அரசு மருத்துவர்களின் பணியை கண்காணிக்கவும், 24 மணி நேரமும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் தொடர்ந்து செயல்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.