தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு முகாம்
அறந்தாங்கி, செப்.14- புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா, நெட்டியேந்தல் கிராமத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு ஸ்கார்ப் இந்தியா மனச் சிதைவு ஆராய்ச்சி மையம் சார்பாக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கே.ராஜேஸ்வரி வரவேற்றார். ஸ்கார்ப் இந்தியா சமூக ஒருங்கிணைப்பாளர் டி.குணச்செல்வி மனநலம் மற்றும் தற்கொலை தடுப்பு பற்றி பேசினார். நிறைவாக எம்.அம்பிகா நன்றி கூறினார். ஒவ்வொரு ஆண்டும் செப்.10 அன்று தற்கொலை தடுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. பெற்றோர் அல்லது கணவன், மனைவி பிரச்சினை, அதனால் ஏற்படும் பிரிவு, நண்பர்களுடனான பிரச்சனை உள்ளிட்டவை தற்கொலைக்கும், மனநலம் பாதிப்பிற்கும் காரணமாக இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
பள்ளியில் மடிக்கணினி திருட்டு
நாகை, செப்.14- நாகை மாவட்டம் வேதாரணியம் வட்டம் ஆயக்காரன்புலம் 2-ஆம் சேத்தி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் அறையில் இருந்த மடிக்கணினி வியாழன் இரவு திருடு போனது. இதுகுறித்த புகாரில் வாய்மேடு காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
பாலியல் விழிப்புணர்வு கருத்தரங்கு
புதுக்கோட்டை, செப்.14- புதுக்கோட்டை அரசு மன்னர் கலைக் கல்லூரியில் கேலி வதை மற்றும் பாலியல் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜெ.சுகந்தி தலைமை வகித்தார். தேர்வு நெறியாளர் அ.சி.நாகேஸ்வரன் முன்னிலை வகித்தார். மாவட்ட மனநலத் திட்ட அலுவலர் ஆர்.கார்த்திக் தெய்வநாயகம், அறந்தாங்கி காவல் துணைக் கண்காணிப்பாளர் கோகிலா பேசினர். தாவரவியல் துறைத் தலைவர் அழகுமணியன் தொகுத்து வழங்கினார்.
வீட்டு வரி ரசீது வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி, செப்.14- கூத்தூரில் நிறுத்தப்பட்ட வீட்டு வரி ரசீதை வழங்க வேண்டும். பனமங்கலம், பழூர் பகுதி தாசில்தார் முன்னிலையில் போடப்பட்ட ஒப்பந்தத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். மின்விளக்கு, குடிநீர், சாலை, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூத்தூர், பாளையம் கிளைகள் சார்பில் வெள்ளிக்கிழமை கூத்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கூத்தூர் கிளை செயலாளர் குணசேகரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழநிசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் கோவிந்தராஜ் ஆகியோர் பேசினர்.
கொள்ளிடம் ஆற்று விபத்து: மேலும் ஒருவர் பலி
தஞ்சாவூர், செப்.14- அரியலூர் கொள்ளிடம் ஆற்றின் நடுவே உள்ள மேலராமநல்லூரில் கடந்த 11-ஆம் தேதி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டவர்கள் படகு மூலம் ஊர் திரும்பி 41 பேர் வந்த போது, பாரம் தாங்காமல் திடீரென படகு கவிழ்ந்தது. இதில் 11 -ஆம் தேதி இரவு 38 பேர் மீட்கப்பட்டனர். இந்த படகில் பயணம் செய்த கருப்பூர் ராணியின் உடல் வியாழக்கிழமை அணைக்கரை அருகே கரை ஒதுங்கியது. பின்னர் அவரது உடல் மீட்கப்பட்டது. மேலும், வெள்ளிக்கிழமை காலை கொள்ளிடம் ஆற்றில் மகாராஜபுரம் அருகே பட்டுக்குடியைச் சேர்ந்த சுயம்பிரகாசம்(55), என்பவரது உடல் கரை ஒதுங்கியது. அந்த உடலை மீட்டனர். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படை க்கப்பட்டது. படகு கவிந்ததில் மாயமான நாயக்கர்பேட்டை பழனிச்சாமியை தொடர்ந்து தேடி வருகின்றனர்.