தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி மெயின் ரோட்டில் ஊராட்சி ஒன்றிய கிழக்குத் தொடக்கப் பள்ளி உள்ளது. கடந்த 29.11.1924 ல் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு, நூற்றாண்டு விழா காண உள்ளது. இப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வரும் சுபாஷ், மாணவர்கள் பங்களிப்புடன் பசுமைத் தோட்டத்தை உருவாக்கி தென்னங்கன்றுகள், மா, பலா, வாழை உள்ளிட்டவை பயிரிட்டு வளர்த்து வருகிறார். இதில் 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரங்காய்ச்சி ரஸ்தாளி வகையைச் சேர்ந்த வாழைக்கட்டையை (கன்று) பயிரிட்டார். அது தற்போது வளர்ந்து 7 அடி உயரத்தில் தார் விட்டுள்ளது. இவற்றில் ஆயிரக்கணக்கான வாழைக்காய்கள் உள்ளன. இது பார்ப்பவர்களை ஆச்சரியப்பட வைக்கிறது. இது குறித்து பேராவூரணி வேளாண் தோட்டக்கலைத் துறை அலுவலர் ராஜ்குமாரிடம் கேட்டதற்கு, “இது நாகர்கோவில் மற்றும் கேரளப் பகுதியில் விளைவிக்கப்படும் சாதாரண ஒரு ரகம் தான். சுவையும் பூவன் பழத்தை போலத் தான் இருக்கும். ஆயிரக்கணக்கான காய்கள் காய்ப்பதால் இதனை ஆயிரங்காய்ச்சி என்பர். வாழைத்தாரில் உள்ள காய்கள் பெரிதாக வேண்டும் என்பதற்காக, வாழை மரத்தின் இலைகளை சிலர் கழித்து விடுவார்கள். அவ்வாறு செய்வது தவறானது. இலைகள் அதிகம் இருந்தால் தான் காய்கள் பெருக்கமடையும். கன்னி யாகுமரி மற்றும் கேரளப் பகுதியில் திருமண மண்டபங்கள், கோயில்களில் அலங்கார தோரணங்களுக்கு இதுபோன்ற வாழை மரங்களை, வாழைத்தாருடன் பயன்படுத்துவது வழக்கம்” என்றார்.