தேனி ,ஜூன்.14: கடமலைக்குண்டு அருகே ஐசிஐசிஐ வங்கியில் விவசாய கடன் பெற்று அதனை திரும்ப செலுத்த முடியாத நிலையில் 3 ஏக்கர் நிலத்தை ஜப்தி செய்ய போவதாக ஊழியர்கள் மிரட்டியதால் திம்மட் மருந்தை அருந்தி விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . ஆண்டிபட்டி தாலுகா குமணந்தொழு கிராமம் அய்யாவு தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்கொடி(56) விவசாயி.இவர் கடந்த 2017 ம் ஆண்டு தேனியில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில் (ஆக்சிஸ் பேங்க்) தனது 3 ஏக்கர் நிலத்தின் பத்திரத்தை அடமானமாக வைத்து விவசாய கடன் ரூ.5 லட்சம் பெற்றுள்ளார். இதன்பின்னர் விவசாயத்தில் ஈடுபட்டு வந்த அவருக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை என்பதால் வங்கி கடனுக்கான தவணை தொகையை முறையாக செலுத்த முடியாமல் இருந்து வந்துள்ளார்.இதனிடையே வங்கியின் சார்பில் பலமுறை ஜெயக்கொடியிடம் மாத தவணை தொகையை கேட்டும் அவர் இழுத்தடித்து வந்ததாகவும் இதனால் வாங்கிய கடனின் முழுத்தொகையையும் வட்டியோடு சேர்த்து உடனடியாக கட்ட வேண்டும் என வங்கி ஊழியர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது வீட்டின் கதவில் நோட்டீஸ் ஓட்டி சென்றனர்.இதனால் மனமுடைந்து காணப்பட்டு வந்த அவரை உறவினர்கள் ஆறுதல் சொல்லி வந்தனர். இந்நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன்பு குமணந்தொழு பேருந்து நிலையம் அருகே மெடிக்கல் கடைக்கு சென்றவரை வழிமறித்த வங்கி ஊழியர்கள் வாங்கிய கடனை விரைந்து செலுத்த வேண்டும் இல்லையென்றால் நிலத்தை ஜப்தி செய்ய போவதாக மிரட்டி விட்டு சென்றதாக கூறப்படுகிறது,இதனால் மனமுடைந்த அவர் வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி விழுந்து கிடந்தார்.வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய அவரது மனைவி மயங்கி கிடந்த ஜெயக்கொடியை மீட்டு உடனடியாக கடமலைக்குண்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர் பின்னர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து ஜெயக்கொடியின் மகன் மலைச்சாமி கொடுத்த புகாரின் பேரில் மயிலாடும்பாறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.விவசாய கடன் பெற்று அதனை திரும்பி புசெலுத்த முடியாமல் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.