திருச்சிராப்பள்ளி, நவ.24- பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அளவிலான கல்வி ஆர்வலர்கள் சந்திப்பு கூட்டம் ஞாயிறு அன்று திருச்சி தூயவளனார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அமைப்பின் தலைவரும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான வசந்தி தேவி தலைமை தாங்கினார். செயலாளர் கிருஷ்ணமூர்த்தி சிறப்புரை யாற்றினார். கூட்டத்தில் ஆசிரியர்களின் பணிச்சுமை, வகுப்பறைக்கு வெளியே என்ற தலைப்புகளில் விவாதம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுப்பள்ளி முறையை அரசு கொண்டு வருவது கட்டாயமாக்கப்பட வேண்டும். அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தை களை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்பது கட்டாய சட்ட மாக்க வேண்டும் என்ற அலகாபாத் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு புத்துயிர் அளிக்க வேண்டும். தாய் மொழி வழிக்கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். சிறந்த தனியார் பள்ளிகளை ஒத்த உள்கட்டமைப்பு அனைத்து அரசு பள்ளிகளிலும் அவசியம் ஏற்படுத்த வேண்டும். 5,8ம் வகுப்பு களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக இதயராஜா வரவேற்றார். ஒருங்கிணைப்புக்குழு மனோகரன் நன்றி கூறினார். கூட்டத்திற்கு பின் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதும் தனியார் பள்ளிகளில் வளர்ந்து வரு வதும் மிகவும் கவலைக்குரிய விசயமாகும். பெரும் ஏழ்மையில் இருக்கும் இந்த சமுதாயத்தில் இலவச கல்வி ஒன்றே சமுதாய வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி முதலான மற்ற அனைத்து வளர்ச்சிக்குமான ஒரே வழியாகும். ஆகவே தான் உலகின் அனைத்து நாடுகளிலும் குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில் பள்ளிக்கல்வி முழுவதும் இலவசமாக அரசு நிதி ஆதாரத்தில் இருந்து அளிக்கப்படுகிறது. தமிழக அரசு அரசுப் பள்ளி களில் மாணவர் சேர்க்கை குறைவு பற்றி கவலைக் கொள்வதாக சொல்கிறது. அதை மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரு வதாகவும் கூறி வருகிறது. ஆனால் உண்மையான காரணங்களை கண்டறிந்து அவற்றைத் தீர்ப்பதற்கு பதிலாக அவ்வப்போது பல கட்ட ளைகளை பிறப்பித்து பள்ளிகளின் செயல்பாடுகளில் நிலையற்ற தன்மையை உருவாக்கி வருகிறது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் 13 ஆயிரத்து 642 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கூறுகிறது. ஆசிரியர்- மாணவர் விகிதாச்சார முறையை பின்பற்றினால் உபரி ஆசிரியர் என்ற பேச்சே வராது. கல்வி பாதுகாப்பு என்பது தேசத்தின் பாதுகாப்பை போன்றது. மத்திய அரசு அனைவருக்குமான கல்விக் கொள்கையை கைவிட்டு தேசிய கல்விக் கொள்கையில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. இது கண்டிக்கதக்கது. ஜனநாயக சமூகத்தை கொண்டு வரும் நோக்கில் கல்விக் கொள்கையானது இருக்க வேண்டும். எவ்வித பேதமின்றி அனைத்து குழந்தைகளுக்கும் சமமான கல்வி வழங்கப்பட வேண்டும் ஆனால் புதிய கல்விக் கொள்கையால் அடித்தட்டு, பழங்குடி யின மக்கள் கல்வியை இழந்து விடுவர் என்றார்.