5 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் விடுபட்ட கொடுமை
சீர்காழி, பிப்.7- நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளில் மொத்தம் 65 ரேஷன் கடைகள் உள்ளன. ஒரு லட்சத்திற்கும் அதிக மான குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இந்நிலை யில் கடந்த தை பொங்கல் விழாவையொட்டி அரசு சார்பில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச வேட்டி சேலைகள் மற்றும் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிவாரண நிதியும் அறிவிக்கப்பட்டு பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச பொங்கல் பரிசும், நிவாரண உதவித்தொகையும் வழங்கப்பட்டன. ஆனால் பொங்கலை முன்னிட்டு அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட இலவச வேட்டி சேலைகள் அனைத்து பயனாளிகளுக்கும் இதுவரை வழங்க வில்லை. கொள்ளிடம் பகுதியில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும், ஒவ்வொரு கடைக்கும் 90 சதவிகித வேட்டி சேலைகள் மட்டுமே வந்துள்ளன. மீதமுள்ளவர்களுக்கு கிடைக்க வில்லை என்று குடும்ப அட்டைதாரர்கள் சார்பில் புகார் எழுந்துள்ளது. ரேஷன் கடைகளைத் தேடி தினந்தோறும் வேட்டி சேலையை மக்கள் கேட்கின்றனர். ஆனால் இதுவரை கிடைக்காமல் சிரமம் அடைகின்றனர். கொள்ளிடம் ஒன்றியத்தில் மட்டும் இதுவரை சுமார் 5 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கவில்லை. எனவே ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு உடனடியாக வேட்டி சேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் செந்தில்குமார் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.