சீர்காழி, செப்.13- கொள்ளிடம் புதுமண்ணியாறு பாசன வாய்க்காலில் காவிரி தண்ணீர் இன்னும் வந்து சேரவில்லை. இதனால் விவசாயிகள் கடும் ஏமாற்றத்தில் உள்ள னர். நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் பாசன வசதி தரும் பிரதான பாசன வாய்க்காலாக இருந்து வரும் புது மண்ணியாறு பாசன வாய்க்காலை நம்பி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் சம்பா நெற்பயிர் செய்ய விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதுவரை இந்த வாய்க்காலில் தண்ணீர் வந்து சேரவில்லை. இந்த வாய்க்காலை தூர்வாரும் பணி முடிவுற்ற பிறகு தான் தண்ணீர் திறந்து விடப்படும் என்று அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் வீணாக தண்ணீர் சென்று கடலில் கலக்கிறது. ஆனால் இதுவரை பாசனத்திற்கு இதுவரை தண்ணீர் திறந்து விடாமல் இருப்பது மிகுந்த வேதனை அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.