சீர்காழி, நவ.8- கொள்ளிடம் பகுதியில் உள்ள உரக்கடைகளில் வேளாண் அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். நாகை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான உரக்கடைகளில் கொள்ளிடம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் சுப்பையன், வேளாண் அலுவலர் விவேக் ஆகியோர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். காலாவதியான தேதியில் உள்ள உரங்கள் விற்பனைகள் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறதா என்றும் ஆய்வு செய்தனர். பின்னர் வேளாண் உதவி இயக்குநர் சுப்பையன் கூறுகையில், கொள்ளிடம் வட்டாரப் பகுதியில் விவசாயிகளுக்கு விநியோகிக்க போதிய அளவு டி.ஏ.பி, யூரியா மற்றும் பொட்டாஷ் ஆகிய உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள், தனியார் கடைகளில் நைய் உரம் என்று தேடி அலைய தேவையில்லை. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி மூலம் விவசாயிகளுக்கு வழங்க தேவையான உரங்கள் உள்ளதால் இதனை வாங்கி விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். தனியார் மூலம் வழங்கப்படும் உரமும் அரசு சார்பில் வழங்கப்படும் உரமும் ஒரே சத்து கொண்டதால் தனியார் கடைகளை தேடி அலையாமல் அருகில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியை அணுகி விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.