tamilnadu

img

திருச்சி காந்தி மார்க்கெட்டில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து - 2 பேர் படுகாயம்

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
திருச்சியில் காந்தி மார்க்கெட் நுழைவு வாயிலில் உள்ள டீ கடையில், இன்று காலை திடீரென சிலிண்டர் வெடித்துள்ளது. தொடர்ந்து மளமளவென பரவிய தீ, செல்போன் ரீசார்ஜ் கடை உள்ளிட்ட அடுத்தடுத்து இருந்த 5 கடைகளுக்கும் பரவியது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். இதில் டீக்கடையில் டீ அருந்திக் கொண்டிருந்த மாநகராட்சி பெண் ஊழியர், வடை சுட்டுக்கொண்டிருந்தவர் ஆகிய 2 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். 
தகவல் அறிந்து விரைந்து சென்ற திருச்சி கண்டோன்மென்ட் தீயணைப்பு படை வீரர்கள், தீ மேலும் பரவாமல் சுமார் 1 மணி நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் கடையில் வைக்கப்பட்டிருந்த மேசை, நாற்காலிகள், மின் சாதனங்கள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன. விபத்துக்கான காரணம் குறித்து காந்தி மார்க்கெட் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.